முதுகில் குத்திட்டாங்க! ஆனாலும் கவலை இல்லை! பெரிய கத்தியை வைத்து முதுகில் குத்துங்கள்! அண்ணாமலை பரபர
பாஜகவில் இருந்து பல நிர்வாகிகள் விலகி வரும் நிலையில் அண்ணாமலை முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஏர்போர்ட்டில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கட்சியில் சிலர் விலகியதற்கு எல்லாம் கவலைப்படப் போவதில்லை என்றும் என்ன நடந்தாலும் தனது அரசியல் மாறப்போவதில்லை என்றும் தெரிவித்தார். இதில் அவர் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் விரிவாகப் பேசியிருந்தார்.
அதிமுகவும் பாஜகவும் கடந்த சில ஆண்டுகளாகவே ஒரே கூட்டணியில் பயணித்து வருகிறது. மக்களவை, சட்டசபைத் தேர்தல்களை ஒன்றாகச் சந்தித்துள்ளன. இந்தச் சூழலில் இரு தரப்பிற்கும் இடையே கடந்த சில நாட்களாகப் பூசல் ஏற்பட்டுள்ளது.
பாஜகவில் ஐடி விங் நிர்மல் குமார் சமீபத்தில் அங்கிருந்து அதிமுகவில் இணைந்தார். அவரை தொடர்ந்து மேலும் சில நிர்வாகிகள் பாஜகவில் இருந்து விலகி, அதிமுகவில் ஐக்கியமாகினர். இது பாஜகவை அப்செட் ஆக்கியுள்ளது.

பாஜகவில் இருந்து விலகல்
பாஜகவில் இருந்து விலகிய சில நிர்வாகிகள், அண்ணாமலையைக் கடுமையாக விமர்சித்திருந்தனர். இது மட்டுமின்றி அவர்கள் அதிமுகவில் இணைந்த நிலையில், அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவை விமர்சிக்கும் வகையிலான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்தச் சூழலில் விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சற்று காட்டமாகவே விமர்சித்தார். சிலர் விலகியதற்கு எல்லாம் கவலைப்படப் போவதில்லை என்றும் என்ன நடந்தாலும் தனது அரசியல் மாறப்போவதில்லை என்றும் தெரிவித்தார்.

அமித் ஷா கேட்டார்
இது தொடர்பாக அவர் கூறுகையில், "பாஜகவில் நான் இணைந்த போது அமித் ஷா என்னிடம் டர்புலன்ஸ் எல்லாம் பார்த்துப்பயா என்றே கேட்டார். அப்போது அவரிடம் என்ஜினே கழன்று விழுந்தாலும் வண்டியை எடுத்துவிடுவேன் என்றே சொன்னேன். எனவே, இதெல்லாம் எனக்குப் புதிது இல்லை. இந்த டர்புலன்சுக்கு எல்லாம் பயப்படக் கூடிய நபர் நானில்லை. விஜயகாந்த்தைச் செய்தது போல என்னைக் குறித்து அவதூறு பரப்பி என்னை ஓரம்கட்டிவிடலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். அதையெல்லாம் பார்த்துவிட்டு வந்தவர்கள் தான் நாங்கள். திரும்பத் திரும்ப என்னைப் பற்றி பொய்யான அவதூறுகளைப் பரப்பி ஓரம்கட்ட முயல்கிறார்கள். இதற்கெல்லாம் நான் அஞ்சப்போவது இல்லை.

என்ன வேண்டுமானாலும் சொல்லுவார்கள்
என்ஜினே கழன்று விழுந்தாலும் இந்த வண்டியை நிச்சயம் எடுப்பேன். இதற்கெல்லாம் பயப்படும் ஆள் நான் இல்லை. நானே சொல்கிறேன். வரும் காலத்தில் நிச்சயம் இதைவிட மோசமாகவே எழுதுவார்கள். பேனாவில் மை இருப்பதால் இப்படித்தான் எழுதுவார்கள். இன்னும் 4,5 பேர் வெளியேறினால் கூடுதலாகவே எழுதுவார்கள். ஆனால், அனைவருக்கும் நான் சொல்வது ஒன்று தான். எங்குச் சென்றாலும் நன்றாக இருங்கள்.. விசுவாசமாக இருங்கள். நம்பிக்கைக்குரியவர்களாக இருங்கள்.

வேகம் குறையாது
பாஜகவின் சித்தாந்தம் யாரையும் வாழ்க என்று கோஷமிட்டு வளர்வது இல்லை. நீங்கள் புதுக்கட்சிக்குச் சென்றுள்ளீர்கள் சற்று பார்த்து இருங்கள். பல ஆண்டுகளாக இங்கிருந்துவிட்டுச் சென்றுள்ளீர்கள். அங்குச் சென்று வாழ்க கோஷம் எல்லாம் ஓவராக போடாதீர்கள். பிறகு பாஜகவில் இருந்ததற்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும். நான் இப்போது 3ஆவது கியரில் போய் கொண்டிருக்கிறேன். வேகம் எல்லாம் குறையாது. 2026 தேர்தலுக்குள் 5ஆவது கியருக்கு போக வேண்டும் என்பதே இலக்கு. இதற்குத் தொண்டர்களும் மக்களும் தயாராகி வருகிறார்கள். அவர்கள் தயாரான பிறகு வேகம் இன்னும் அதிகரிக்கும். எந்த நிலையில் பாஜகவின் வேகம் குறையாது.

மாறப்போவதில்லை
கூட்டணியில் இருந்தாலும் கூட உங்களுக்குப் பணிந்து போக வேண்டும் என நினைக்காதீர்கள். அது எனது ரத்தத்திலேயே கிடையாது. எங்கே இருந்தாலும் நேருக்கு நேர் பேசுவேன். அந்த குணம் தான் என்னை இங்கு வந்து நிறுத்தியுள்ளது. இஷ்டமிருந்தால் இருங்கள்.. இல்லையென்றால் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் சென்று சேருங்கள்.. நான் இருக்கும் வரை மாறப்போவதில்லை. நான் அதற்காக அரசியலுக்கு வரவில்லை. எம்எல்ஏ, எம்பி பதவிகளை அடைய நான் இங்கு வரவில்லை. ஐபிஎஸ் வேலையைத் தூக்கி எரிந்துவிட்டு வந்தவன் நான். இதனால், எம்எல்ஏ, எம்பி பதவிகளுக்காக இங்கு வந்தவன் இல்லை.. முதல்வராகவும் ஆசை இல்லை. என்னைவிடத் தகுதியானவர்கள் பலர் இருக்கிறார்கள்.

முதுகில் குத்துங்க கவலையில்லை
பாஜகவை எப்படியாவது ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என்றே ஒரே காரணத்திற்காக வந்துள்ளேன். என்ன நடந்தாலும் அதைச் செய்தே தீருவேன். முதுகில் இன்னும் இடம் இருக்கிறது. தாராளமாகக் குத்துங்கள்.. 2,3 பேர் முதுகில் குத்தியதால் எதுவும் ஆகாது. நான் எதையும் தாங்குவேன். பெரிய கத்தியை வைத்துக் குத்துங்கள்.. சின்ன துரோகங்கள் எல்லாம் கொசு கடிப்பதைப் போலத் தான் இருக்கும். நான் இப்படித்தான். யாருக்காகவும் மாற்றிக் கொள்ள மாட்டேன்.. டெல்லியில் இருந்து கூப்பிட்டுச் சொன்னாலும் மாற்றிக் கொள்ள மாட்டேன்.

அரசியல் செய்ய எனக்கு தெரியும்
இப்படியிருந்தால் மட்டுமே தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும் தமிழகத்தை முன்னிறுத்தி அரசியல் செய்தால் மட்டுமே இங்கு வேலை செய்யும் என்பது நன்றாகத் தெரியும். எனவே, வரும் காலத்தில் வேகம் குறையாது. அரசியலில் இதேபோலத் தான் இருப்பேன். நான் இருக்கும் வரை எனது பேச்சு மாறாது. வேண்டுமென்றால் என்னை ஒதுக்கிவிட்டு அரசியல் செய்யுங்கள்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications