நாளை முதல் இபாஸ், இ பதிவு எதுவும் தேவையில்லை..! தமிழகத்தில் சுற்றுலா தலங்களை திறக்க ஏற்பாடு தீவிரம்
சென்னை: தமிழ்நாட்டில் மாவட்டங்களுக்கு இடையேயான இபாஸ்/ இ பதிவு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது, இதையடுத்து மாநிலம் முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்களைத் திறக்க தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. தினசரி வைரஸ் பாதிப்பு 35 ஆயிரம் வரை கூட சென்றது.
இதையடுத்து நிலைமையைச் சமாளிக்க மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கிற்குப் பின்னரே மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மெல்லக் கட்டுக்குள் வந்தது.

கொரோனா 2ஆம் அலை
கடந்த மே மாதம் முதலில் மாநிலம் முழுவதும் தளர்வுகளற்ற ஊரடங்கு இரண்டு வாரக் காலம் அமல்படுத்தப்பட்டது. அப்போது சென்னை உள்ளிட்ட பல பகுதிகளிலும் வைரஸ் பாதிப்பு குறைந்திருந்தாலும், கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட சில மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு குறையாமல் இருந்தது. இதையடுத்து மாநிலத்தில் கொரோனா குறைந்த மாவட்டங்களுக்கு மட்டும் கூடுதல், தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, வைரஸ் பாதிப்பு அதிகமாக இருந்த மாவட்டங்களுக்குத் தளர்வுகள் அறிவிக்கப்படாமல் இருந்தது.

Array
இந்த நடைமுறைக்குச் சிறப்பான பலன் கிடைத்தது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களிலும் வைரஸ் பாதிப்பு குறைந்து, கட்டுக்குள் வந்தது. இதையடுத்து, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே விதமாகத் தளர்வுகளுடன் வரும் ஜூலை 12ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. முக்கியமாக மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இபாஸ் மற்றும் இ பதிவு முறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

புதிய தளர்வுகள்
இது மட்டுமின்றி மாநிலத்திலுள்ள பொழுதுபோக்கு, கேளிக்கை பூங்காக்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாஸ்க் அணிவது, ,கிருமிநாசினி பயன்படுத்துவது ஆகியவற்றைப் பின்பற்றி மக்களை அனுமதிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் இபாஸ்/ இ பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்களைத் திறக்க இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஊட்டி
மலைகளின் ராணி என்று அழைக்கப்படும் ஊட்டியில் அமைந்துள்ள சுற்றுலா மையங்கள் சுமார் 45 நாட்களுக்குப் பின் நாளை திறக்கப்படுகிறது. அங்குத் தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத் துறைக்குச் சொந்தமான தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா ஆகியவற்றைத் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. அதேபோல அங்குள்ள விடுதிகளிலும் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

கொடைக்கானல்
அதேபோல திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதிக்கும் நாளை முதல் பொதுமக்கள் இபாஸ் இல்லாமல் வந்து செல்லலாம். அங்கு அமைந்துள்ள பிரையன்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா ஆகியவற்றைத் திறக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுமார் 1.5 மாதங்களுக்குப் பிறகு சுற்றுலாத் தலங்கள் திறக்கப்படுவதால் அம்மாவட்ட மக்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

மக்கள் குஷி
ஏனென்றால், முழுக்க முழுக்க சுற்றுலாப் பயணிகளை நம்பியே இருக்கும் சிறு வியாபாரிகள், வழிகாட்டிகள் கொரோனா ஊரடங்கு காலத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இதனால் அங்கு வாழும் மக்கள் பெரும் சிக்கல்களை எதிர்கொண்டனர். இந்தச் சூழலில் நாளை முதல் அமலுக்கு வரும் தளர்வுகள், அம்மாவட்ட மக்களுக்குச் சற்றே ஆறுதலாக அமையும்.












Click it and Unblock the Notifications