சென்னை அருகே லோக்மான்யா திலக் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ.. பற்றி எரிந்த என்ஜின்.. அலறிய பயணிகள்
சென்னை: சென்னையில் இருந்து மும்பைக்கு இன்று மாலையில் லோக்மான்யா திலக் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது. இந்நிலையில் தான் சென்னை அருகே அந்த ரயில் என்ஜின் திடீரென்று தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை - மும்பை இடையே லோக்மான்யா திலக் எக்ஸ்பிரஸ் இயங்கி வருகிறது. இந்த ரயில் தினமும் மாலை 6.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மும்பை புறப்பட்டு செல்லும். இன்றும் வழக்கம்போல் இந்த ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது.

ரயிலில் ஏராளமான பயணிகள் பயணித்தனர். இந்த ரயில் 7.18 மணிக்கு அரக்கோணம் ரயில் நிலையத்தை சென்றடைய வேண்டும். இதையடுத்து அரக்கோணம் ரயில் நிலையத்தை நோக்கி ரயில் சென்று கொண்டிருந்தது.
சென்னை பேசின் பிரிட்ஜ்- வியாசர்பாடி இடையே ரயில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று ரயில் என்ஜின் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த லோகோ பைலட் உடனடியாக ரயிலை நிறுத்தினர். ரயில்வே போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே ரயில் நின்றதால் இறங்கிய பயணிகள் என்ஜினில் பிடித்த தீயை பார்த்து அலறினர்.

மேலும் என்ஜின் அருகே பொருத்தப்பட்டு இருந்த பெட்டிகளில் இருந்தவர்கள் தங்களின் உடைமைகளை எடுத்து கொண்டு வேகவேகமாக ரயிலில் இருந்து இறங்கினர். இதற்கிடையே அவர்கள் விரைந்து வந்து என்ஜினில் பிடித்த தீ பிற பெட்டிகளுக்கு பரவாமல் தடுத்தனர். மேலும்ஒரு மணிநேரம் போராடி என்ஜினில் பிடித்த தீயை அணைத்தனர்.
உயர்அழுத்த மின்கம்பியின் மின்சாரத்தில் ஏற்பட்ட கசிவு காரணமாக என்ஜின் தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் சரியான காரணம் தெரியவில்லை. இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது. ரயிலின் லோகா பைலட், உதவி பைலட்டுகளில் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து தீவிபத்து நடந்த என்ஜினுக்கு பதில் புதிய என்ஜின் மாற்றப்பட்டது. இதையடுத்து சென்னை-மும்பை லோக்மான்யா திலக் எக்ஸ்பிரஸ் ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இந்த விபத்து காரணமாக அரக்கோணம் வழியாக இயக்கப்படும் ரயில்கள் சற்று தாமதமாகின என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications