ரயில் மட்டும் வரும்.. ஆனால் டிரைவர் வரமாட்டாராம்.. முதன்முறையாக சென்னையில் எங்கே ஓடப்போகுது பாருங்க
சென்னை: சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரெயில் வழித்தடத்தில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளது.. இதுகுறித்து குட்நியூஸ் ஒன்று வெளியாகியிருக்கிறது
சென்னையில் போக்குவரத்து நெரிசல் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது.. இந்த போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், நீண்ட தொலைவை குறைந்த நேரத்தில் கடப்பதற்காகவும் மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

அதன்படி, கடந்த 2015ம் ஆண்டு முதல், சென்னையில் விமான நிலையம் - விம்கோ நகர், சென்ட்ரல் - பரங்கிமலை ஆகிய 2 வழித்தடங்களில் சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
மாதவரம் பால் பண்ணை: இதையடுத்து, சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 116.1 கி.மீ நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதவரம் பால் பண்ணை - சிறுசேரி சிப்காட், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பணிமனை, மாதவரம் பால் பண்ணை - சோழிங்கநல்லூர் ஆகிய மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
பூந்தமல்லி- கலங்கரை விளக்கம் வரை, மொத்தம் 26 கி.மீ., துாரத்திற்கு மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைக்கும் அமைக்கும் பணிகள் வேகமான நடந்து வருகின்றன. எனவே, பூந்தமல்லி முதல் பரந்தூர் புதிய விமான நிலையம் வரை 43.63 கி.மீ நீளத்திற்கு 19 உயர்மட்ட மெட்ரோ நிலையத்துடன்அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் மெட்ரோ ரயில் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது....
விறுவிறுப்பு: இந்த நிலையில், 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் வழித்தடத்தில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. டிரைவர் இல்லாத 62 மெட்ரோ ரெயில்கள் தயாரிப்பு பணி ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டியில் நடந்து வருகிறது.
இதில், 3 பெட்டிகள் கொண்ட டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் அடுத்த மாதமே சென்னைக்கு கொண்டுவரப்படுகிறதாம். இதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருவதாக மெட்ரோ ரெயில்வே அதிகாரிகள் கூறுகிறார்கள்.
பூந்தமல்லி: இதுகுறித்து அதிகாரிகள் மேலும் சொல்லும்போது, மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட வழித்தடத்தில் டிரைவர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட முதல் ரெயில் செப்டம்பர் மாதம் சென்னை பூந்தமல்லியில் உள்ள பணிமனைக்கு கொண்டு வரப்பட்டு மெட்ரோ ரெயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். முற்றிலும் ஏசி வசதி கொண்ட பெட்டிகளாகவும், பெண்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் பிரத்யேக இடங்களும் அமைக்கப்படுகிறது.
இந்த ரெயில் மணிக்கு 80 கி.மீ வேகத்தில் இயக்கப்படும்.. ஒரு ரெயிலில் 1000 பேர் வரையில் பயணம் செய்யும் அளவுக்கு இடவசதியுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.. செல்போன் மற்றும் கம்ப்யூட்டர்களுக்கு சார்ஜ் செய்து கொள்ளலாம். டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் இயக்கப்பட உள்ள தண்டவாளங்களில் ரெயில் இயக்கம் குறித்த அதிநவீன கருவிகள் பொருத்தப்பட உள்ளது.
முதல் மெட்ரோ: கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலான 4-வது வழித் தடத்தில் பூந்தமல்லி - கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் வரையிலான உயர்மட்டப் பாதையில் ஓட்டுனர் இல்லாத முதல் மெட்ரோ ரெயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது... எப்படியும் இந்த ஆண்டு இறுதிக்குள் சோதனை ஓட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது என்கிறார்கள்.
2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தில் இயக்குவதற்காக, டிரைவர் இல்லாத முதல் மெட்ரோ ரெயில் அடுத்த மாதமே சென்னை கொண்டுவரப்போவது, பயணிகளிடையே மிகுந்த மகிழ்ச்சியை உண்டுபண்ணி வருகிறது.












Click it and Unblock the Notifications