நாக்கை துருத்திய விஜயகாந்த்.. மிரண்டு பார்த்த ஜெயலலிதா.. அதிர்ந்த சட்டசபை! அஞ்சா நெஞ்சன்
சென்னை: தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில், அவர் தமிழக எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட மோதல் குறித்த பிளாஷ் பேக் நினைவலைகளை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
கடந்த 2011ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேமுதிக போட்டியிட்டது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. அப்போது திமுக என்பதே இல்லாமல் போய்விட்டது. கூட்டணியில் போட்டியிட்ட தேமுதிகதான் எதிர்க்கட்சியாக இருந்தது. சட்டப்பேரவையில் 2012ம் ஆண்டு பால், மின்சார கட்டண உயர்வு குறித்து, தே.மு.தி.கவின் எம்எல்ஏக்கள் பிரச்னையை எழுப்பினர். தேமுதிக எம்எல்ஏவான சந்திரகுமார்தான் இந்த கேள்வியை எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த ஜெயலலிதா, இந்த கேள்விகளுக்கு பலமுறை விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது என்று கூறினார். இருப்பினும், விடாப்பிடியாக, "உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பே இதை செய்திருக்கலாமே? ஏன் செய்யவில்லை" என்று சந்திரகுமார் கேள்வி எழுப்ப ஜெயலலிதா ஆவேசமடைந்தார். "விலை ஏற்றத்திற்கு பின்னர் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வருகிறது. இந்த தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட்டு அமோக வெற்றி பெறும். உங்களுக்குத் திராணி இருந்தால் தனித்து நின்று பாருங்கள்" என்று ஆவேசமாக விஜயகாந்த்தைப் பார்த்துக் கூறினார்.
அதுவரை அமைதியாக இருந்த விஜயகாந்த், "ஆளும் கட்சி எப்படி இடைத்தேர்தலில் வெற்றிபெரும் என்பது எங்களுக்கு தெரியும்" என்று கூறினார். இப்படியாக வாக்குவாதம் தீவிரமடைந்தது. யாரால் கூட்டணிக்கு வெற்றி கிடைத்தது என்ற பேச்சும் எழுந்தது. ஜெயலலிதாவும், விஜயகாந்தும் நேரடி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய ஜெயலலிதா, "தேமுதிகவுடன் கூட்டணி வைத்ததற்கு வருத்தப்படுகிறேன். இனி, அந்த கட்சியுடன் எக்காலத்திலும் கூட்டணி கிடையாது. பெற வேண்டிய ஏற்றங்களை, தேமுதிக என்னால் பெற்று விட்டது. இனி அந்த கட்சிக்கு இறங்குமுகம்தான்" என்று ஆவேசமாக கூறினார்.
இதனையடுத்து விஜயகாந்த் மற்றும் தேமுதிக எம்எல்ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் விஜயகாந்த் உட்பட அனைவரும் சட்டமன்றத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். இந்த மோதலில் ஜெயலலிதாவை பார்த்து விஜயகாந்த் நாக்கை துருத்தியதாக சொல்லப்படுகிறது. ஆனால் பின்னாட்களில், அவர் ஜெயலலிதாவை பார்த்து அப்படி செய்யவில்லை என்று அவரது ஆதரவாளர்கள் விளக்கமளித்தனர். இருப்பினும், தற்போது வரை இந்த மோதல் சம்பவம் சட்டமன்ற வரலாற்றில் மறக்க முடியாததாக இருக்கிறது.
இதன் பின்னர் தேமுதிகவின் செல்வாக்கு கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியது. ஒரு கட்டத்தில் விஜயகாந்துக்கு உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டது. வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெற்றும் கூட அவரது உடல் நிலை இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. இதற்கிடையில் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இருப்பினும் எல்லா சவால்களையும் சந்தித்து முறியடித்து வந்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த போது அவர் உயிரிழந்துவிட்டதாக வதந்திகள் பரவின.
இந்த வதந்தி பொய்யென நிரூபித்து, அவரே நேரடியாக தொண்டர்களை சந்தித்தார். இது தேமுதிகவுக்கு புத்துணர்ச்சியாக அமைந்தது. ஆனால் மீண்டும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று காலை முதல் அவரது வீட்டின் முன்பு ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். மருத்துவமனை முன்பும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இதனையடுத்து அவர் நுரையீரல் அழற்சி பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால், அவரது தொண்டர்களும், திரை உலகமும் சோகத்தில் மூழ்கியுள்ளது.












Click it and Unblock the Notifications