சென்னையின் குடிநீர் ஆதாரமான பூண்டி ஏரிக்கு பெருகும் நீர்வரத்து.. 30 கிராமங்களுக்கு வெள்ள அபாயம்!
சென்னை: சென்னையின் குடிநீர் ஆதாரமான பூண்டி ஏரிக்கு நீர்வரத்து விநாடிக்கு 14 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. பூண்டி ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் உள்ள 30 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய 5 ஏரிகளில் 80.14% நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டி.எம்.சி.யில் தற்போது 9.422 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் சென்னை நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகமாகி நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
சென்னையின் குடிநீர் ஆதாரமான பூண்டி ஏரிக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 5 ஆயிரத்து 800 கனஅடி தண்ணீர் வந்த நிலையில் நேற்று மாலை நிலவரப்படி ஏரிக்கு 10 ஆயிரத்து 500 கனஅடியாக வரத்து அதிகரித்தது. நீர்வரத்து அதிகமானதால் பூண்டி ஏரியின் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பும் அதிகரிக்கப்பட்டது.
பூண்டி ஏரின் உயரம் 35 அடி. இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று மாலை 5 மணி நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 33 அடியாக பதிவாகி இருந்தது. பூண்டி ஏரியிலிருந்து இணைப்பு கால்வாய் வழியாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு 400 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அதேபோல் சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாயில் வினாடிக்கு 17 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்நிலையில் பூண்டி ஏரிக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி பூண்டி ஏரிக்கான நீர்வரத்து வினாடிக்கு 14 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. நேற்று மாலை 10,500 கனஅடியாக நீர்வரத்து இருந்த நிலையில் தொடர்ந்து நீர்வரத்து உயர்ந்து வருகிறது. ஏரியில் இருந்து வினாடிக்கு 9,500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பூண்டி ஏரியில் இருந்து 9,500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் உள்ள ஆற்றம்பாக்கம், ஒதப்பை, மோவூர், மெய்யூர், அணைக்கட்டு, ஜனப்பன்சத்திரம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications