அடையாற்றில் வெள்ளம்.. பெருங்களத்தூர் பகுதியில் 600-க்கும் மேற்பட்டோர் வீடுகளில் இருந்து வெளியேற்றம்
சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறந்து விடப்படுவதால் அடையாறு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக பெருங்களத்தூர் பகுதியில் உள்ள அன்னை அஞ்சுகம் நகர் பகுதியில் உள்ள வீடுகள் மழை நீரால் சூழப்பட்டுள்ளது. அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கால் பெருங்களத்தூர் பகுதியில் 600-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
சென்னை பூந்தமல்லி அருகே உள்ளது செம்பரம்பாக்கம் ஏரி. சென்னை மாநகரத்திற்கு குடிநீர் வழங்கும் மிகப்பெரிய ஏரிகளில் இதுதான்முக்கியமானது. இந்த ஏரி நிறைந்தால், இதன் உபரிநீர் அடையாறு ஆற்றில் திறந்துவிடப்படும்.. சென்னையின் மையப்பகுதியை சீரிபாய்ந்து செல்லும் இந்த அடையாறு ஆறு மழைக்காலங்களில் ஆபத்தானவே இருக்கிறது. கடல் போல் பல கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியாகும். இந்த ஏரி நிரம்பும் தருவாயில் உள்ளதால், உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் அடையாறு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இந்த அடையாறு ஆறு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து பல்வேறு பாதைகளை கடந்து நேரடியாக பெருங்களத்தூர் வழியாக வரும். பின்னர் அனாகாபுத்தூர் மற்றும் விமான நிலையம் வழியாக நுழைந்து கிண்டி, சைதாப்பேட்டை கடந்து அடையாறு முகத்துவாரம் வழியாக கடலில் கலக்கும். இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பால் தாம்பரம் மாநகராட்சி பெருங்களத்தூர் பகுதியில் உள்ள அன்னை அஞ்சுகம் நகர் பகுதியில் உள்ள வீடுகள் மழை நீரால் சூழப்பட்டிருக்கிறது.
இதன் காரணமாக அந்தப் பகுதியில் உள்ள 600-க்கும் மேற்பட்டோர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு தாம்பரம் மாநகராட்சி அம்பேத்கர் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் ஆய்வு நடத்தினார். அப்போது தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் கோ.காமராஜ், மாநகராட்சி கமிஷனர் பாலசந்தர், மண்டல குழு தலைவர் டி.காமராஜ் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றார்கள்.
அடையாற்றில் இப்படி என்றால், சென்னையில் ஓடும் மற்றொரு நதியான கூவம் ஆற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழையால் கூவம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுசவதால் நொளம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தரைப்பாலங்கள் வெள்ளநீரில் மூழ்கிகிடக்கின்றன. வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையின் புறநகர் பகுதியான ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 7-வது வார்டு திருமுல்லைவாயல் ராஜாமணி நகர், ஸ்ரீ சுப்பிரமணி நகர் மற்றும் சிவா கார்டன் பகுதியில் 100 -க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்திருக்கிறது. இடுப்பளவிற்கு மழை நீர் தேங்கியுள்ளதாகவும், அத்தியாவசிய பொருட்கள் வாங்ககூட வெளியே செல்ல முடியாத சூழலில் தவிப்பதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications