மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிஏ சண்முகநாதன் காலமானார்
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் எழுத்தாணியாக விளங்கிய உதவியாளர் சண்முகநாதன் காலமானார்.
சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் எழுத்தாணியாக விளங்கிய உதவியாளர் சண்முகநாதன் காலமானார். வயோதிகம், உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக தனி உதவியாளராக பணியாற்றியவர் சண்முகநாதன் தனது 80வது வயதில் இன்று காலமானார்.
மறைந்த முன்னாள் முதல்வரின் நிழலாகப் பார்க்கப்பட்டவர், சண்முகநாதன். 50 ஆண்டுகளாக கருணாநிதியின் நேர்முக உதவியாளராக பணியாற்றியவர், கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
கருணாநிதியின் எண்ணங்களை உள்வாங்கி அவரது கண் அசைவுக்கு ஏற்ப காரியமாற்றியவர். கருணாநிதியின் அரசியல் வாழ்வின் ஆவணமாக திகழ்ந்தவர் சண்முகநாதன்.

காவல்துறையில் நிருபர் பணி
கருணாநிதியின் நிழல் என்று குறிப்பிடும் அளவுக்கு அவருடன் நெருக்கமாக இருந்தவர் அவரது உதவியாளர் சண்முகநாதன். தமிழக காவல்துறையில் சுருக்கெழுத்து நிருபராக தனது வாழ்க்கையை தொடங்கிய சண்முகநாதன், எதிர்க்கட்சி தலைவர்கள் மேடையில் பேசுவதை குறிப்பெடுத்து தட்டச்சு செய்து அரசுக்கு அனுப்புவார்.

கருணாநிதியின் பிஏவானது எப்படி?
கருணாநிதியின் மனச்சாட்சி என்று திமுகவினரால் அழைக்கப்பட்டவர். சண்முகநாதனை எப்படி இந்த பணிக்கு அழைத்துக் கொண்டார் என்பதை ஒருமுறை கருணாநிதியே கூறியுள்ளார். முன்பெல்லாம் பேராசிரியர், என் போன்றோரின் பேச்சுகளை உடனுக்குடன் பதிவு செய்து எழுதி மேலிடத்துக்கு அனுப்பும் பணியை காவல் துறையின் துப்பறியும் பிரிவினர் செய்வார்கள் அப்படி பதிவு செய்த பேச்சுகளை வைத்து வழக்கு போடுவார்கள்.

வரிக்கு வரி பதிவு
அப்படித்தான் ஒருமுறை என் பேச்சு குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு போடும் அளவுக்கு அப்படி என்ன நான் பேசிவிட்டேன் என்பதை அறிய, போலீஸிடமிருந்த எனது பேச்சு நகலை வாங்கிப் பார்த்தேன். வியந்தும் போனேன். என்னுடைய பேச்சு, பேராசிரியர் அன்பழகனின் பேச்சு மற்றும் திமுகவினரின் பேச்சுகளெல்லாம் அப்படியே எழுத்து வடிவமாகப் பதிவாகியிருந்தது. ஒரு எழுத்துகூட தவறாமல் அத்தனையும் பதிவாகி இருந்ததைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன்.

சரியான எழுத்து
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது 'நீங்கள் இப்படிப் பேசினீர்களா?' என்று நீதிமன்றத்தில் கேள்விகள் கேட்ட நேரத்தில், 'மனச் சாட்சிப்படி உண்மைதான், அவை நாங்கள் பேசியது தான்' என்று ஒப்புக்கொள்ளவும் நேரிட்டது.
யார் இவ்வளவு தெளிவாக எங்கள் பேச்சை அச்சு அசலாக படியெடுத்திருப்பார்கள் என்று விசாரித்தபோதுதான், சண்முக நாதன் பற்றி எனக்கு தெரிய வந்தது.

என்னோடு கலந்தவர் சண்முகநாதன்
நான் அமைச்சரானபோது, பி.ஏ.வாக யாரைப் போடலாம் என யோசித்த நேரத்தில் சண்முகநாதன்தான் நினைவுக்கு வந்தார். அந்தத் தம்பியை வைத்துக் கொள்கிறேன் என்றேன். சண்முகநாதனைப் பொறுத்த வரை, அவர் என்னுடைய அலுவலகத்திலே வேலை பார்ப்பவர் என்பதைவிட, என்னு டைய அகத்திலே இருந்து பணியாற்றுபவர். வெறும் சம்பளத்துக்காக வந்தவர் அல்ல. இந்த இயக்கத்திலே தன்னை ஒப்படைத்துக்கொள்ளும் அளவுக்கு என்னோடு கலந்து விட்டவர்" என்று கருணாநிதியே கூறியிருந்தார்.

திமுக தலைவர்கள் இரங்கல்
50 ஆண்டுகாலம் கருணாநிதியுடன் இருந்தவர் சண்முகநாதன். வயது முதிர்வு காரணமாக கருணாநிதியின் மறைவுக்கு பிறகு ஓய்வெடுத்து வந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரை சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் போய் சந்தித்து உடல் நலம் விசாரித்து வந்தார். இந்த நிலையில் இன்று உடல் நலக்குறைவு காரணமாக சண்முகநாதன் காலமாகி விட்டார். சண்முகநாதன் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று திமுக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications