முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு சிக்கல்.. வேலை வாங்கி தருவதாக ரூ.23 லட்சம் மோசடி செய்ததாக புகார்
சென்னை: அரசு போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூபாய் 23 லட்சம் மோசடி செய்ததாக எழுந்த புகார் தொடர்பான வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த எஸ்.எஸ் சிவசங்கர் மீது ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் சீனிவாசன் என்பவர் சென்னை காவல் ஆணையகரத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அந்த புகாரில, தனது மகனுக்கு போக்குவரத்து துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி அப்போதைய அமைச்சர் சிவசங்கர் ரூபாய் 23 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார். சிவசங்கருக்கு நெருக்கமானவர் எனக் கூறி இளஞ்செழியன் என்பவர் வங்கிக் கணக்குகளில் இந்தப் பணத்தை செலுத்தியதாகவும் கூறியுள்ளார்.
மேலும், சென்னை தலைமைச் செயலகத்தில் சிவசங்கரை சந்திக்க இளஞ்செழியன் ஏற்பாடு செய்தார் என்றும், அப்போது தனது மகனுக்கு போக்குவரத்துத் துறையில் வேலை உறுதியாகிவிட்டதாக தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். ஆனால், வேலை வாங்கிக் கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாக தனது புகாரில் கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிவசங்கருக்கு நெருக்கமானவர் எனக் கூறப்படும் இளஞ்செழியன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மோசடி தொடர்பான குற்றச்சாட்டு குறித்து நேரடியாக விசாரணைக்கு ஆஜராகும்படி அசோக் நகர் போலீசார் முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications