முடிசூடா மன்னன்..25 வருஷமா அசைக்க முடியலயே..! வேஸ்ட் லக்கேஜ்..நான் தோற்க காரணமே இதுதான்! சூடான டி.ஜெ
சென்னை: பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் தான் அதிமுக ஆட்சியே பறிபோனது. ராயபுரத்தில் நான் தோற்கிற ஆளா என்ன? 25 வருடங்கள் முடிசூடா மன்னனாக ராயபுரம் பகுதியில் இருந்தேன் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக பாஜகவை விமர்சித்துள்ளார்
5 நாட்களே தேர்தல் திருவிழாவிற்கான கால அவகாசம் இருக்கும் நிலையில் இறுதி கட்டப் பிரச்சாரம் சூடு பிடித்திருக்கிறது. தற்போதைய சூழலைப் பொறுத்தவரை திமுகவும் சரி அதிமுகவும் சரி பாஜகவை நோக்கிய விமர்சனக்கணைகளை தொடுத்து வருகின்றன.

பிரச்சாரத்தின் ஆரம்பத்தில் அதிமுக திமுகவை விமர்சிப்பதையே வாடிக்கையாகக் கொண்டு இருந்தது. ஆனால் இந்த மோதல் இப்போது அதிமுக-பாஜக மோதலாக மாறி இருப்பது திமுகவை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
பாஜக-அதிமுக மோதல்: அதே நேரத்தில் திமுக அதிமுகவையும் பாஜகவையும் விமர்சித்து வந்த நிலையில், பாஜகவினர் திமுகவை மட்டும் நோக்கிய கேள்விகளை எழுப்பி வந்தனர். இந்த நிலையில் சமீபத்திய செய்தியாளர் சந்திப்புகளில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பேச்சுகள் அதிமுகவினரை கொதிப்படைய வைத்தது. கவுன்சிலர் கூட ஆக முடியாது தம்பி அண்ணாமலை.. பார்த்து நடந்துக்க.. என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்ததின் மூலம் மோதல் உச்சமடைந்திருக்கிறது.
பாஜக கூட்டணி: இந்நிலையில் பாஜக கூட்டணியால் தான் ஆட்சி போனதாகவும், அசைக்க முடியாத தானே ராயபுரத்தில் தோற்றதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர்," பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் தான் அதிமுக ஆட்சியே பறிபோனது. ராயபுரத்தில் நான் தோற்கிற ஆளா என்ன? 25 வருடங்கள் முடிசூடா மன்னனாக ராயபுரம் பகுதியில் இருந்தேன்.. தோல்வி என்பதையே நான் அறியவில்லை. பாஜகவால்தான் நான் தோல்வியடைந்தேன்.
ஜெயக்குமார்: பாஜக இல்லையெனில் நான் சட்டமன்றத்திற்கு சென்றிருப்பேன். பாஜக எங்கள் கூட்டணியில் இருந்ததால் ராயபுரத்தில் உள்ள 40,000 கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் என சிறுபான்மையின மக்கள் எனக்கு எதிராக வாக்களித்தனர். அவர்களுக்கு என் மீதான கோபம் கிடையாது. பாஜக மீது தான் கோபம். பாஜகவை கழட்டிவிட்டு வாருங்கள் உங்களுக்கு ஓட்டு போடுகிறோம் என்று சொன்னார்கள்.
5 முறை வெற்றி: அவர்களிடம் பாஜக வேஸ்ட் லக்கேஜ் தான். என்ன செய்ய.. சமயம் வரும்போது கழட்டி விட்டுவிடுவோம் என்று சொன்னேன். அதேபோல நேரம் வந்தது பாஜகவை கழட்டிவிட்டுவிட்டோம். பாஜக இல்லை என்றால் 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இருப்பேன். ஒட்டுமொத்தமாக 2019 மற்றும் 2021 தேர்தல்களில் நாங்கள் பாஜகவால் மட்டுமே தோல்வி அடைந்தோம்." என பேசினார். 1991 முதல் ராயபுரம் தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக இருந்த ஜெயக்குமார் 2021 தேர்தலில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications