4 ஆம் தேதி 40-லும் வெற்றின்னு சொன்னாரே உதயகுமார்.. இப்படி ஆயிடுச்சே.. புலம்பும் அதிமுக தொண்டர்கள்
சென்னை: 4 ஆம் தேதி 40 தொகுதியிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்று லோக்சபா தேர்தலுக்கு முன்பு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேசிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி பரவி வருகிறது.
நாட்டின் 18-வது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் கடந்த 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்தது. லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் 4 முனை போட்டி நிலவியது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

தமிழகத்தில் திமுக போட்டியிட்ட 21 தொகுதி, காங்கிரஸ் 9, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2 தொகுதி, இந்திய கம்யூனிஸ்ட் 2 தொகுதி, விடுதலை சிறுத்தைகள் 2 தொகுதி, மதிமுக 1, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 1, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1 ஆகிய 39 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. அதேபோன்று புதுச்சேரியில் காங்கிரஸ் போட்டியிட்ட ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றது.
திமுக கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெற்ற நிலையில், அடுத்த இடத்தில் அதாவது 2வது இடத்திற்கு அதிமுக, பாஜக வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவியது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக பின்தங்கி, பாஜக கூட்டணியில் போட்டியிட்ட பல தலைவர்கள் 2வது இடத்துக்கு வந்துள்ளனர்.
7 தொகுதிகளில் அதிமுக டெபாசிட்டை பறிகொடுத்தது. லோக்சபா தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்புதான் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது. தேமுதிக, புரட்சி பாரதம், எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகளுடன் கூடட்ணி அமைத்து போட்டியிட்ட அதிமுக 32 இடங்களில் களம் கண்டது. ஆனால், அனைத்திலும் படு தோல்வியை சந்தித்துள்ளது.
தற்போது தேர்தல் ரிசல்ட்டிற்கு முன்பு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் அளித்த பேட்டி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆர்பி உதயகுமார் தேர்தல் ரிசல்ட்க்கு முன்பு அளித்த பேட்டியின் போது கூறுகையில், "4 ஆம் தேதி 40 தொகுதியிலும் அதிமுக வெற்றி பெறும்.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக 40 இடங்களில் வெல்வதற்கு மக்கள் தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள். அந்த தீர்ப்பு வெளி வந்த பிறகு எடப்பாடி யாரை கை காட்டுகிறாரோ அவருக்கு இந்தியாவை ஆளக் கூடிய பொன்னான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது" என்றார்.
லோக்சபா தேர்தலில் அதிமுக சுமார் 20 சதவிகித வாக்குகளே வாங்கியுள்ள நிலையில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்துள்ளது. இதனால் அதிமுக தொண்டர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இதனிடையே ஆர்பி உதயகுமாரின் 4 ஆம் தேதி 40 தொகுதி என்ற அந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications