நான் உண்டு.. என் ஆடு, மாடு உண்டுனு இருக்கேன்..மாநில தலைவர் ஒரு வெங்காய பதவி! அப்செட்டில் அண்ணாமலை!
சென்னை: தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டதிலிருந்து முன்னாள் தலைவரான அண்ணாமலை பொது நிகழ்ச்சிகளில் மட்டுமே கலந்து கொள்கிறார். கட்சி நிகழ்ச்சிகளில் அவ்வளவாக தலை காட்டாத நிலையில் மாநில தலைவர் பதவி வெங்காயப் பதவி எனவும், தான் உண்டு என் ஆடு, மாடு உண்டு, கிரிக்கெட் உண்டு என இருக்கிறேன் என விரக்தியாக பேசி இருக்கிறார்.
2026க்காக அதிமுக கூட்டணியில் சேர்ந்தாலும் பாஜக அதிமுகவுக்கு மறைமுகமாக நெருக்கடி கொடுத்து வருகிறது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு, கூட்டணி ஆட்சி, அமைச்சரவையில் இடம் என உள்ளூர் பாஜக தலைவர்கள் குமுறிக் கொண்டிருந்த நிலையில் அதனை டெல்லி தலைமையும் உறுதி செய்வது போல பேசி இருக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், பாஜக அதில் பங்கேற்கும் எனக் கூறியிருக்கிறார்.

அடுத்த நாளே தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு இல்லை, அதிமுக தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இப்படி அதிமுக பாஜக கூட்டணி பொருந்தாக் கூட்டணியாகவே இருக்கிறது. தொடர்ந்து திமுகவும் பிற கட்சிகளும் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு சாத்தியமில்லை, அதிமுகவை பாஜக அழிக்க பார்க்கிறது என்ற விமர்சனத்தை முன் வைத்தனர். இதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய எடப்பாடி பழனிச்சாமி பாஜக கூட்டணியில் தான் இருக்கிறது. திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். அதே நேரத்தில் ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஏமாளி அல்ல என கூறி இருக்கிறார்.
இதனால் கூட்டணி தேர்தல் வரை தொடருமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. அதிமுக தயவில் தான் பாஜக இருக்கிறது என்றாலும் கட்சி தலைமை ஏன் அந்த கட்சிக்கு அடிபணிந்து போகிறது என்ற கேள்வி தொண்டர்களிடையே எழுந்திருக்கிறது. ஒருவேளை பாஜகவை கூட்டணியில் இருந்து கழற்றி விட்டால் பாமக, தேமுதிக தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகளை இணைத்து மெகா கூட்டணியை உருவாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் மீண்டும் கூட்டணி விவகாரங்களை பேச தொடங்கி இருக்கிறார் தமிழக பாஜக முன்னாள் தலைவர் ஆன அண்ணாமலை. எடப்பாடி பழனிச்சாமியின் ஏமாளி குறித்த பேச்சுக்கு பதில் அளித்த அவர் பாஜக ஏமாறும் கட்சியும் அல்ல.. ஏமாற்றும் கட்சியும் அல்ல எனக் கூறியிருந்தார். இது ஒரு புறம் இருக்க தமிழக பாஜக நிகழ்ச்சிகளில் அண்ணாமலை தொடர்ந்து தலை காட்டுவதில்லை. விமான பயணங்களின் போது மட்டும் சென்னை, கோவை விமான நிலையங்களில் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார் .
இந்த நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலையின் பேச்சு, தமிழக பாஜக மீதான தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் இருந்தது. அப்போது பேசிய அவர்," தேசிய பொதுச்செயலாளர் பதவி தர வாய்ப்பு இருக்கிறதா என கேட்கிறார்கள். பதவியை நோக்கி நான் சென்றதில்லை, மாநில தலைவர் பதவியே வெங்காயம் தான் உரிக்க உரிக்க ஒன்றும் இல்லாதது. நான் எந்த பதவியையும் விரும்பவில்லை. நான் உண்டு, என் ஆடு மாடு உண்டு, கிரிக்கெட் உண்டுனு இருக்கேன்" என கூறியுள்ளார்.
கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதியில் நடக்கும் பாஜக நிகழ்ச்சிகளில் அண்ணாமலையின் புகைப்படங்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதனை அண்ணாமலையின் ஆதரவாளர்கள் எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சமூக கடுமையாக கண்டித்து வருகின்றனர். மேலும் கமலாலயம் தவிர்த்து பாஜகவில் பிற நிகழ்ச்சிகளில் அண்ணாமலை பங்கேற்பதில்லை எனவும் சொல்லப்படுகிறது. கட்சி பொறுப்பும் இல்லை, அரசு பதவியும் இல்லை என்பதால் அண்ணாமலை கடும் அப்செட்டில் இருப்பதாகவும் அதனைத் தான் செய்தியாளர்கள் சந்திப்பில் வெளிப்படுத்தி வருகிறார் என்கின்றனர் பாஜகவினர்.












Click it and Unblock the Notifications