அடிச்சுவிட்ட 'டயலாக்'.. கோட்டை வரை 'அதிர்ந்த' சிரிப்பலை.. 'நான் அப்படித்தான்' - கர்ஜித்த கமல்
சென்னை: என்னய்யா இது.. சினிமா டயலாக்கை எல்லாம் இங்க பேசிக்கிட்டு இருக்காரு நம்மவரு என்று மநீம கூடாரத்திலேயே சில முணுமுணுப்புகள் இந்த சம்பவத்துக்கு பிறகு எழுந்துள்ளன.
உண்மையில் 'உலகநாயகன்' கமல்ஹாசனுக்கு தில் இருக்குங்க. அவர் நினைத்திருந்தால், இன்னும் 10 படங்கள் பண்ணலாம், பிக்பாஸ் ஷோவை அடுத்த ஐந்தாறு வருடங்களுக்கே குத்தகைக்கு எடுக்கலாம். ஏசி ரூமில் ஜம்முன்னு உட்கார்ந்திருக்கலாம்.
ஆனால், நான் என் மக்களுக்கு நல்லது செய்தே தீருவேன் என்று அரசியல் பாதையை அவர் தேர்ந்தெடுத்துள்ளார். சும்மா, அரசியலுக்கு வரேன்னு சொல்லிவிட்டு வீட்டில் உட்காராமல், இன்று வீதி வீதியாய் சுற்றி சுற்றி வருகிறார். சட்டப்பேரவை தேர்தல் சாதாரண சாம்பார் மேட்டர் இல்லை என்று அவருக்கு நன்றாக தெரியும். தன் பலத்தை நிரூபித்தே ஆக வேண்டிய கட்டாயம், அவரை எந்த நிமிடமும் தூங்கக் கூட விடுவதில்லை. ஆனால், அவரது செயல்பாடுகள், ஒரு தேர்ந்த அரசியல்வாதியாக இருக்கிறதா?

கமல் என்றால் கற்பூரம்
2019 மக்களவை தேர்தல் தான் மக்கள் நீதி மய்யம் சந்தித்த முதல் தேர்தல். அந்த அனுபவம் கமல்ஹாசனுக்கு நிறையவே உள்ளது. கட்சி ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. முழு நேர அரசியல்வாதியாகிவிட்டார். கூட்டணி கட்சிகளை அரவணைத்து செல்லும் பக்குவத்தை இத்தேர்தலில் கற்றுக் கொண்டிருக்கிறார். கற்பதெல்லாம் கமலுக்கு கற்பூரம் போன்றது. சும்மா கப் கப்பென்று பிடித்துக் கொள்வார்.

ஊழல் செய்தால் மர்கயா
ஆனால், சமீபத்திய அவரது பேச்சு தான், இவர் அரசியல்வாதியா அல்லது இன்னமும் ஹீரோ மோடிலேயே இருக்கிறாரா என்ற ஐயத்தை நமக்கு மட்டுமல்ல.. கமலை 'இவர் நம்மவர்'ப்பா என்று நம்பி வந்த அவரது கட்சிகாரர்கள் சிலருக்கும் லேசான கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் திருப்பூண்டியில் கீழ்வேளூர் வேட்பாளரை ஆதரித்து பேசிய கமல்ஹாசன், "இந்தியன் படம் போன்று ஊழல் செய்தால் கொல்வேன். அது என்னுடைய குடும்பத்தாராக இருந்தாலும் சரி.. ஏனெனில், என் அப்பா என்னை எப்படி வளர்த்திருக்கிறார்' என்று போகிற போக்கில் பன்ச் சொல்லி கிலி ஏற்படுத்தியிருக்கிறார்.

பிரதான ஆயுதம்
எதே.. கொலை பண்ணுவாரா? என்னய்யா இது.. இப்படிலாம் சினிமா டயலாக் மாதிரி பேசிக்கிட்டு இருக்கார் என்று மக்கள் சலசலக்க, மநீம தொண்டர்கள் முதல்ல இங்கிருந்து கிளம்பினா போதும்-னு பம்மியிருக்கின்றனர். திமுக, அதிமுகவுக்கு மாற்று என்பதே கமல் கையில் சுழற்றும் பிரதான ஆயுதம். இதே திராவிட கட்சி எதிர்ப்பு டயலாக்கை இதற்கு முன் எத்தனையோ கட்சிகள் ரிப்பீட் செய்திருந்தாலும், கமல் சொல்வதற்கு அதிக வேல்யூ இருந்தது. ஏனெனில், கமல் நடிகர்.. உலகநாயகன்... ஒரு நடிகராக தமிழகத்தின் இண்டு இடுக்கிலும் இவர் முகம் நுழையாத இடமில்லை. ரஜினி அளவுக்கு இல்லாவிட்டாலும், இவரை முழுமையாக நம்பும் ஒரு கூட்டமே உள்ளது. குறிப்பாக நகர்ப்பகுதிகளில்.. 2019 மக்களவை தேர்தலே அதற்கு சாட்சி.

எப்படி நம்புவார்கள்?
இப்படி தனக்கென்று தனி வாக்கு வங்கி கொண்டு, தன்னை முழுமையாய் நம்பும் தொண்டர்களையும் கொண்டிருக்கும் கமல், 'ஊழல் செய்தால் கொல்வேன்' என்றால் இது ஒரு தேர்ந்த அரசியல்வாதிக்கு அழகா? என்று கேள்வி எழுப்புகின்றனர் அரசியல் நோக்கர்கள். ஆளும் அதிமுக அமைச்சர்கள் புள்ளிவிவரங்களை தவறாக பேசுவது, வரலாற்றையே தப்புத் தப்பாய் கூறுவது, உளறுவது போன்றவற்றை அனைவரும் விமர்சிக்க, அவர்களுக்கு மாற்றாக வருகிறேன் என்று கூறும் கமல், இப்படி சினிமா டயலாக்கை பேசிக் கொண்டிருந்தால், மக்கள் எப்படி இவரை ஒரு தலைவராக ஏற்றுக் கொள்வார்கள்? முதலில் எப்படி இவரை நம்புவார்கள்? என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

இப்படியா ப்ரூஃப் காட்டுவது?
அதிலும் 'என் தந்தை என்னை அப்படி வளர்த்திருக்கிறார்' என்று அந்த சினிமா வசனத்துக்கு காரணம் கர்ப்பித்தது தான் இந்த சப்ஜெக்ட்டின் ஹார்ட் பீஸ். சரி.. ஏதோ பேச வந்தவர், தெரியாத்தனமாக ஊழல் செய்தால் கொல்வேன்' என்று வாய் குளறி கூறிவிட்டார் என்று சமாளித்துவிடலாம் என்று பார்த்தால், தந்தையையே இழுத்து வந்து ப்ரூஃப் தந்திருக்கிறார் கமல். அதுமட்டுமின்றி, கமலின் இந்த பன்ச் டயலாக்கை கேட்டு ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று பல தரப்பிலும் கிண்டலாக பேசி சிரித்துள்ளார்களாம். இதைக் கேள்விப்பட்ட நம்மவர், 'நான் சும்மா டயலாக்குக்காக அப்படி சொல்லல.. இப்பவும் சொல்றேன் ஊழல் செய்தால் நிச்சயம் எவரையும் விட மாட்டேன்' என்று உறுதியாக சொல்லியிருக்கிறாராம்.












Click it and Unblock the Notifications