சென்னையை நோக்கி வரும் கஜா புயல்.. இப்போது எங்குள்ளது? பரபர புகைப்படங்கள்!
கஜா புயல் நேரம் செல்ல செல்ல சென்னையை நோக்கி வேகமாக நகர்ந்து வந்து கொண்டு இருக்கிறது
Recommended Video
சென்னை: கஜா புயல் நேரம் செல்ல செல்ல சென்னையை நோக்கி வேகமாக நகர்ந்து வந்து கொண்டு இருக்கிறது.
இந்த கஜா புயல், அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர சூறாவளி புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடந்த வாரம் வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வுமண்டலமாகி தற்போது புயலாக மாறி உள்ளது.
இதனால் சென்னைக்கு பெரும் மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. சென்னை மட்டுமில்லாமல் கடலூர், நாகையிலும் அதிக அளவில் மழை பெய்யும்.
[தீவிரமடையும் கஜா புயல்.. அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர சூறாவளி புயலாக மாறும்! ]
எங்கு கடக்கிறது
கஜா புயல் முதலில் ஸ்ரீஹரிகோட்டாவில்தான் கடக்கும் என்று கூறினார்கள். இந்த புயலின் திசை தற்போது கொஞ்சம் மாறியுள்ளது. இந்த புயல் தற்போது சென்னைக்கும், நாகைக்கும் இடையில் கரையை கடக்க உள்ளது. நவம்பர் 15ம் தேதி இந்த புயல் கரையை கடக்க உள்ளது.
எவ்வளவு வேகம்
இந்த புயல் மொத்தம் 120-140 கிலோ மீட்டர் வேகம் வரை அடைய வாய்ப்புள்ளது. சென்னையில் இதன் காரணமாக 120 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசலாம். அப்படி காற்று வீசும்பட்சத்தில் மிகப்பெரிய சேதங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எப்படி செல்லலாம்
இந்த புயல் சென்னையை நோக்கித்தான் தற்போது வந்து கொண்டு இருக்கிறது. சென்னை வழியாக கடலூர் அருகே சென்று அப்படியே கடலில் கரையை கடக்க வாய்ப்புள்ளது. இதனால்தான் சென்னையில் அதிக அளவில் கனமழை பெய்யும் என்று வானிலை அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.
இப்போது எங்கு இருக்கிறது
இப்போது இந்த புயல் சென்னையில் இருந்து 740 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. நேற்று புயல் உருவான போது 990 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது. இன்று மாலைக்குள் புயல் சென்னையை பெருமளவில் நெருங்கிவிடும் என்கிறார்கள்.
என்ன வேகத்தில் வருகிறது
நேற்று முழுக்க இந்த புயல் 18 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்தது. இன்று காலையில் இருந்து 25 கிலோ மீட்டர் வேகம் வரை எட்டியது. இன்று மாலை 30 கிலோ மீட்டர் வேகத்தை இந்தபுயல் எட்ட வாய்ப்புள்ளது.
மீன் பிடிக்க தடை விதிப்பு
இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மறுஉத்தரவு வரும் வரை மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. முக்கியமாக சென்னை மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது.