4 வருட ஏக்கம்.. கணபதி செண்டிமெண்ட்.. போயஸ்கார்டனில் தனி மரமாக நின்ற சசிகலா.. உருக்கமான பின்னணி!
சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சசிகலா இன்று போயஸ் கார்டனில் உள்ள "ஜெய கணபதி" ஆலயத்தில் உள்ள விநாயகருக்கு மலர் தூவி வழிபாடு நடத்தினார். அவரின் இந்த வழிபாட்டிற்கு பின் பல உருக்கமான செண்டிமெண்ட் காரணங்கள் இருக்கின்றன.
தமிழ்நாடு முதல்வராக இருந்த ஜெயலலிதா தீவிர கடவுள் பக்தை. அதிலும் ஜெயலலிதாவிற்கு விநாயகர் என்றால் மிகவும் பிடித்தம். ஒவ்வொரு முறை தேர்தல் சமயத்திலும், தனக்கு கஷ்டம் வரும் போதிலும், சந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கும் போதிலும் ஜெயலலிதா முதலில் செல்வது ஏதாவது ஒரு விநாயகர் கோவிலாகத்தான் இருக்கும்.
தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரங்களின் போதெல்லாம் ஜெயலலிதா செல்லும் இடங்களில் பிரசித்தி பெற்ற விநாயகர் கோவில் இருந்தால் நேராக அங்கு சென்றுவிட்டுதான் பிரச்சாரமே செய்வார். அதோடு ஒவ்வொரு முறை போயஸ் கார்டனில் இருக்கும் தனது வீட்டில் இருந்து ஜெயலலிதா வெளியே வரும் போது அதே சாலையில் உள்ள சிறிய "ஜெய கணபதி" விநாயகர் கோவிலில் வழிபாடு நடத்திவிட்டுத் தான் செல்வார்.

கோட்டூர்புரம்
இந்த ஜெய் கணபதி கோவில் என்றில்லை சென்னையில் இருக்கும் பிரசித்தி பெற்ற விநாயகர் கோவில்களுக்கு எல்லாம் ஜெயலலிதா அடிக்கடி செல்வது வழக்கம். உதாரணமாக கோட்டூர்புரம் மேம்பாலத்திற்கு கீழே இருக்கும் வரசித்தி விநாயகர் கோவில் அதிமுகவின் மூன்று கட்ட தலைவர்களுக்கு மிகவும் பிடித்தமானது. சென்னையில் எம்ஜிஆர் ஆட்சியின் போது வெள்ளம் ஏற்பட்டது. சென்னையின் சில பகுதிகள் கடுமையாக நீரில் மூழ்கின. முதல்வராக இருந்த எம்ஜிஆர் மக்களை நேரில் சந்திக்க செல்கிறார். நேராக செல்லும் முன் விநாயகர் அருளை பெற்றிட விரும்பினார்.

படகு
இதற்காக சிறப்பு படகு எடுத்துக்கொண்டு இந்த பகுதிக்கு சென்று மேம்பாலத்திற்கு கீழ் இருந்த விநாயகரை தரிசித்துவிட்டுதான் அன்று பணிகளை செய்தார். அந்த அளவிற்கு இந்த விநாயகர் மீது நம்பிக்கை வைத்து இருந்தார். அதே பாதையை ஜெயலலிதாவும் பின் தொடர்ந்தார். தான் முதல்முறை முதல்வரான பின் இதே கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தார். அரசியல் இடர்பாடுகள் வரும் போதெல்லாம் இந்த கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வார். தேர்தலுக்கு முன் இந்த கோவிலுக்கு சென்று பூஜைகள் செய்வது வழக்கம்.

பெங்களூர்
டான்சி வழக்கில் விடுதலையான பின்பும், சொத்து குவிப்பு வழக்கில் ஜாமீன் கிடைத்த பின்பும் இங்கே அடிக்கடி சென்று ஜெயலலிதா பூஜை செய்து இருக்கிறார், கோட்டூர்புரம் விநாயகர் கோவிலும் தனது போயஸ் வீட்டிற்கு அருகில் இருக்கும் விநாயகர் கோவிலும் ஜெயலலிதாவிற்கு எப்போது விருப்பமானது. தனக்கு மனக்கஷ்டம் ஏற்பட்டால் ஜெயலலிதா நாடியது விநாயகரைத்தான். ஜெயலலிதாவை பின்பற்றியே சசிகலாவும் தீவிரமாக விநாயகரை வணங்க தொடங்கினார்.

ஜெயலலிதா நம்பிக்கை
ஜெயலலிதாவை பொறுத்தவரை.. தனக்கு என்ன பிரச்சனை இருந்தாலும் விநாயகரை வழிபட்டால் அது சரியாகிவிடும். மனக்கஷ்டங்களை அவரிடம் சொன்னால் சரியாகிவிடும் என்று நம்பினார். இதனால்தான் அவருக்கு உடல் ரீதியாக சில பிரச்சனைகளும், வழக்கு ரீதியாக சில நெருக்கடிகளும் வந்த போதெல்லாம் ஏதாவது ஒரு விநாயகர்கோவிலில் வழிபாடு நடத்தி விடுவார். ஜெயலலிதாவோடு இணைந்து சசிகலாவும் இப்படி கோவிலில் வழிபாடு நடத்தி இருக்கிறார்.

விநாயகர்
விநாயகர் வழிபாட்டில் ஜெயலலிதாவை ஒருபடி மிஞ்சி சசிகலா தீவிரமாக தியானம் செய்வது, கோவிலிலேயே நீண்ட நேரம் அமர்ந்து வழிபாடு செய்வது என்று விநாயகர் வழிபாட்டில் சசிகலா மிக தீவிரம் காட்ட கூடியவர். சசிகலா சிறையில் இருந்து வந்த பின் போயஸ் கார்டன் சென்று அங்கு வேதா இல்லம் அருகே இருக்கும் வீட்டில்தான் வழிபாடு செய்தார். அங்கு சசிகலா புதிய வீடு கட்டி வருகிறார். இந்த வீட்டிற்கு கடந்த மே மாதம் சென்று கட்டுமான பணிகளை பார்வையிட்டவர், போயஸ் கார்டனில் வேதா நிலையம் அருகே இருக்கும் விநாயகர் கோவிலுக்கும் சென்றார்.
Recommended Video

தியானம்
இது ஜெயலலிதா வழக்கமாக வணங்கும் விநாயகர் கோவில். சசிகலாவிற்கும் பிடித்தமான கோவில். சசிகலா சென்ற பொது கோவில் பூசாரி அந்த நேரத்தில் இல்லாததால் பூசாரி வந்து, பூஜை நடக்கும் வரை சசிகலா கோவிலுக்கு உள்ளேயே தியானம் செய்தார். இப்படி போயஸ் கார்டன்.. அந்த சாலை.. வீட்டோடு நெருங்கிய உணர்வுபூர்வமாக தொடர்பு கொண்ட சசிகலா மீண்டும் அதே பகுதியில் குடியேற உள்ளார். இதே கோவிலில் இன்றும் சசிகலா விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வழிபாடு நடத்தினார். கடைசியாக 4 வருடங்களுக்கு முன் விநாயகர் சதுர்த்தியின் போது சசிகலா வழிபாடு செய்தார். ஜெய விநாயகர் கோவிலுக்கு வந்த சசிகலா அங்கு பாலபிஷேகம் செய்து வழிபாடு செய்தார்.

2016
2016ல் வந்த விநாயகர் சதுர்த்தியின் போது ஜெயலலிதாவுடன் சேர்ந்து இங்கே வழிபாடு நடத்தினார். தனி மரமாக எந்த ஆரவாரமும் இன்றி இன்று சசிகலா இதே கோவிலில் வழிபாடு நடத்திவிட்டு சென்றது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. கடவுள் வழிபாடு என்பதை தாண்டி இது ஒரு அரசியல் ஸ்டேட்மென்ட்டாகவும் பார்க்கப்படுகிறது. சரியாக எம்ஜிஆர்.. ஜெயலலிதா பாதையை பின்பற்றி சசிகலாவும் விநாயகர் வழிபாட்டை கையில் எடுத்துள்ளார். ஜெயலலிதா பொதுவாக பெரிய அரசியல் திட்டங்களுக்கு முன் இப்படி வழிபாடு நடத்துவார்.. சசிகலா எந்த திட்டத்தை மனதில் வைத்து இப்படி வழிபாடு நடத்தினார் என்பது போக போகத்தான் தெரியும்!












Click it and Unblock the Notifications