இரிடியம் மோசடி அதிகரித்துள்ளது.. ஏமாந்துடாதீங்க, கவனம்! தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை
சென்னை: இரிடியம் மோசடி கும்பலால் தமிழ்நாட்டில் பலர் ஏமாற்றப்பட்டு இருப்பதாகவும் 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் அடுத்த 2 ஆண்டுகளில் 3 கோடி ரூபாய் வரை லாபம் கிடைக்கும் என அக்கும்பல் ஆசை வார்த்தை கூறி மோசடியில் ஈடுபடுவதாகவும் மக்கள் ஏமாந்துவிட வேண்டாம் என்று தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை வீடியோ வெளியிட்டுள்ளார்.
தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தனது சமூக வலைத்தள பக்கத்தில் சமூக விழிப்புணர்வு மற்றும் சைபர் கிரைம் குற்ற செயல்கள் தொடர்பாக அடிக்கடி பதிவிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
அந்த வகையில், தற்போது அரங்கேறி வரும் நூதன முறைகேடு குறித்தும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி டிஜிபி சைலேந்திரபாபு வீடியோ வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு காவல்துறையின் சமூக வலைத்தள பக்கத்தில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது அதில் சைலேந்திர பாபு கூறியிருப்பதாவது:-
ஈரோடு கிழக்கு..இபிஎஸ் லைனுக்கு வரும் ஓபிஎஸ்..வேட்பாளரை வாபஸ் பெற திட்டம்..பரபர ஆலோசனை
இரிடியம் மோசடி
இரிடியம் மோசடியில் பலர் ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள். இரிடியம் என்ற பொருளை நாம் வாங்கி விற்கலாம். இது ஒரு பிசினஸ்.. யாருக்குமே தெரியாது. ரகசியமாக இருக்க வேண்டும். நீங்கள் ஒரு ஐந்து லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் உங்களுக்கு அடுத்த 2 ஆண்டுகளில் மூன்று கோடி ரூபாய் கிடைத்து விடும் என்று சொல்வார்கள். சரி என முதலில் நீங்களும் ஒரு லட்ச ரூபாயை முதலீடு செய்ய போவீர்கள். அப்போது, ஏற்கனவே நிறைய பேர் முதலீடு செய்து விட்டதால் முடிந்து விட்டது என்று சொல்வார்கள்.
பணத்தை கொடுக்க மாட்டார்கள்
உங்க டெபாசிட்டை ஏற்றுக்கொள்ள முடியல.. சாரி என்று சொல்வார்கள். நீங்களும் திருப்பி ஐந்து லட்ச ரூபாயை கொண்டு போகும் போது வாங்கிக் கொள்வார்கள். பிறகு இரண்டு வருஷம் கழிச்சி பார்த்தால் அவர்கள் சொல்வது போல பணத்தை கொடுக்க மாட்டார்கள். மூன்று கோடி ரூபாய் தரலாம் என்று சொன்னீர்களே என்னாச்சு என்று கேட்டால் நாங்க என்ன செய்வது... பெரிய பெரிய அதிகாரிகள் இருக்கிறார்கள்... அந்த அதிகாரிகள்தான் இதை டீல் பண்ணுறாங்க..
5 லட்ச ரூபாயையும் ஏமாற்றி விடுவார்கள்
அவுங்களை பார்க்க வேண்டுமானால் கூட்டிட்டு போறேன் என்று சென்னை கூட்டிட்டு போவாங்க... அந்த அதிகாரியை பார்ப்பதற்கு சென்னையில் பல இடத்தில் அலைந்து கொண்டு இருப்பார்கள். பிறகு அவர் அமெரிக்கா போயிட்டாருங்க.. என்று சொல்லி உங்களை அலைக்கழிப்பார்கள். இப்படி உங்களை சோர்வடையவைத்து விட்டு அந்த ஐந்து லட்ச ரூபாயையும் ஏமாற்றி விடுவார்கள். நிறைய பேர் தமிழ்நாட்டில் ஏமாற்றப்பட்டு இருக்காங்க...
ஏமாந்து விடாதீர்கள்
சேலத்தில் வழக்கு போட்டு இருக்கிறோம். கன்னியாகுமரியில் வழக்கு போட்டு இருக்கிறோம். கன்னியாகுமரியில் வழக்கு போட்டு இருக்கிறோம். சிலர் கேரளாவில் பணத்தை இழந்து விட்டு இங்கு வந்து நிற்கிறார்கள். இரிடியம் இன்வெஸ்ட்மண்ட் பண்ணுங்க என்று சொன்னாலே மோசடி என்று பொருள். உடனே அந்த நபரை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்து விடுங்கள். கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை அதில் கொடுத்து ஏமாந்து விடாதீர்கள். கவனமாக இருங்கள்" என்று டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.