சென்னை ரயிலில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி.. சினிமா பாணியில் புகுந்த கொள்ளையர்கள்.. பயணிகள் அலறல்
சென்னை: சிக்னலை சேதப்படுத்தி மும்பையில் இருந்து சென்னை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரயிலை நடுவழியில் நிறுத்திய கும்பல், பின்னர் தூங்கிக் கொண்டிருந்த பெண் பயணிகளை குறிவைத்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களால் மிரட்டி நகை, பணம் கொள்ளையடித்து சென்ற அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. ரயில் பயணிகளிடம் நகை பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ரயிலில் பயணிக்கும் பெண்கள், முதியவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் இருந்து சென்னைக்கு நாள்தோறும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மும்பையில் இருந்து பிற்பகல் 12.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மறுநாள் காலையில் 10.45 மணிக்கு சென்னை செண்டிரல் ரயில் நிலையம் வந்தடைகிறது. நாள்தோறும் இந்த ரயிலில் பயணிகள் பயணித்து வருகிறார்கள்.

மும்பை டூ சென்னை வந்த ரயில்
அப்படித்தான் நேற்று இரவும் மும்பையில் இருந்து சென்னை செண்டிரல் ரயில் நிலையத்துக்கு எக்ஸ்பிரஸ் ரயில் வந்துகொண்டிருந்தது. அப்போது நள்ளிரவில் இந்த ரயில் ஆந்திரா மாநிலத்தின் அனந்தபுரம் மாவட்டம் தாடிபத்திரி என்ற காட்டு பகுதிகளில் வந்துகொண்டிருந்தது. அப்போது சிக்னலில் பச்சை நிறம் ஒளிராததால், ரயில் நடு காட்டுக்குள் நின்றது. நள்ளிரவு நேரம் என்பதால் பயணிகளும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.
அலறிய பயணிகள்
அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் திடீரென எஸ் ஒன் மற்றும் எஸ் 2 ஆகிய ஸ்லீப்பர் முன்பதிவு பெட்டிக்குள் மளமளவென புகுந்தனர். அவர்கள் கையில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுங்கள் இருந்தன. தூங்கிக் கொண்டிருந்த பயணிகளின் கழுத்தில் கத்தியை வைத்து அந்த கும்பலினர், நகை, பணத்தை கொடுக்குமாறு மிரட்டியுள்ளனர். இதனால் திடுக்கிட்டு எழுந்த பயணிகள் அதிர்ச்சியில் கத்தி அலறினர்.
எனினும் அந்த கும்பலினர் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதால், கையில் கிடந்த மோதிரம், கழுத்தில் கிடந்த செயின்கள் உள்ளிட்ட தங்க நகைகளை கழற்றி கொடுக்கும் நிலை நேரிட்டது. அங்கு இருந்த பல ஆண் பயணிகள் இதனை தடுக்க முயற்சித்தபோதிலும் அவர்களால் முடியவில்லை. கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி மிரட்டி பல பயணிகளிடம் இருந்த தங்க நகை, பணத்தை மிரட்டி வாங்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
சிக்னலை சேதப்படுத்தி அரங்கேற்றம்
நகைகளை பறிகொடுத்த பயணிகள் கதறி அழுதனர். இதையடுத்து சம்பவம் குறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து நடத்திய விசாரணையில் வேண்டும் என்றே ரயில் சிக்னலை சேதப்படுத்தி, ரயிலை நடு வழியில் நிறுத்தி திட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவத்தை அந்த கும்பலினர் அரங்கேற்றி இருப்பது தெரியவந்தது.
கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பல் பற்றிய விவரம் உடனடியாக தெரியவில்லை. சிக்னல் சரியானதும் ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. தொடர்ந்து நகை, பணத்தை பறிகொடுத்த பயணிகள் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நள்ளிரவில் ரயிலை நிறுத்தி பயணிகளிடம் கத்தி, அரிவாள் முனையில் நகை பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ரயிலில் பயணிக்கும் பெண்கள், முதியவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications