கேஸ் சிலிண்டர் விலை ஏறுது? எஸ்பிஐ பேங்க் அதிரடி.. நாளை முதல் தலைகீழாக மாறப்போகுது இந்த 5 விஷயங்கள்
சென்னை: இன்றுடன் அக்டோபர் 31ம் தேதி முடிவடைய உள்ள நிலையில், நாளை நவம்பர் 1-ம் தேதி முதல் சில புதிய நடைமுறைகள் அமலுக்கு வருகின்றன.. அந்தவகையில், என்னென்ன துறைகளில், என்னென்ன விதிகள் மாறப்போகின்றன என்பதை சுருக்கமாக காணலாம்.
ரயில் டிக்கெட் முன்பதிவு விதிகள் மாற்றப்படவிருக்கின்றன.. முன்பிருந்ததுபோல, 120 நாட்களுக்கு முன்பு, டிக்கெட் ரிசர்வ் செய்ய முடியாது. 60 நாட்களுக்கு முன்புதான் ரிசர்வ் செய்ய முடியும். பயணிகளின் வசதிக்காகவே, அட்வான்ஸ் டிக்கெட் முன்பதிவு விதிகளில் இந்த மாற்றத்தை ரயில்வே செய்திருக்கிறது.

ரிசர்வ் வங்கி: அதேபோல, இந்திய ரிசர்வ் வங்கி, உள்நாட்டு பணப் பரிமாற்றத்திற்கான (DMT) புதிய விதிகளை வெளியிட்டிருக்கிறது.. இந்த புதிய விதிமுறைகளானது, நாளை நவம்பர் 1,ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.. வங்கி செயல்முறைகளில் மோசடிகளை தடுப்பதற்காகவே இப்படியொரு நடைமுறையை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
அதேபோல, இந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 13 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது.. வங்கிகள் லீவு என்றாலும், வங்கியின் ஆன்லைன் சேவைகள் எந்நேரமும் இயங்கி கொண்டுதான் இருக்கும்.. இதனால் பணப்பரிவர்த்தனைகளில் தட்டுப்பாடும், சிக்கலும் ஏற்படாது.
எஸ்பிஐ கார்டு: எஸ்பிஐ-யின் துணை நிறுவனமான எஸ்பிஐ கார்டு (SBI Card), கிரெடிட் கார்டு பயனர்களுக்கு சில புதிய விதிகள் நாளை முதல் அமலுக்கு வருகின்றன.. அதன்படி அன்செக்யூர் எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளுக்கு மாதாந்திர நிதிக் கட்டணம் 3.75% ஆகவும், மின்சாரம், தண்ணீர், எல்பிஜி மற்றும் இதர பயன்பாட்டு சேவைகளுக்கு ரூ.50,000-க்கு மேல் செலுத்தினால் கூடுதலாக 1 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும்.
அதேபோல, எல்பிஜி சிலிண்டர் விலைகள் ஒவ்வொரு மாத துவக்கத்திலும் பகீரை கிளப்பிவிடும்.. காரணம், ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் எண்ணெய் நிறுவனங்கள் எல்பிஜி சிலிண்டர் விலையை மாற்றுகின்றன... அந்தவகையில், 14 கிலோ வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலையில் நாளைய தினம் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
கடந்த 3 மாதங்களில் மட்டும் விலை அதிகரிப்பு ரூ.94ஆக உள்ளது.. எனினும், 14 கிலோ உள்நாட்டு எல்பிஜி சிலிண்டர்களின் விலை குறையும் என்று நுகர்வோர் தரப்பில் நம்பிக்கையும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
மியூச்சுவல் ஃபண்டுகள் (Mutual Funds) : நவம்பர் 1 முதல், பரஸ்பர நிதித் துறையில் உள் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்த செபி கடுமையான விதிகளை அமல்படுத்துகிறது. அதன்படி, அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனங்களால் (ஏஎம்சி) நிர்வகிக்கப்படும் நிதியில், அதை நிர்வகிக்கும் அதிகாரிகளின் வாரிசுதாரர்கள் மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள் ரூ.15 லட்சத்துக்கும் அதிகமான பரிவர்த்தனைகளை செய்தால் அதை தெரியப்படுத்த வேண்டும்.
CNG மற்றும் PNG விலைகள்: எண்ணெய் நிறுவனங்கள் மாத மாதம் 1ம் தேதியில், சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி எரிவாயு எரிபொருள் கட்டணங்களை மாற்றியமைத்து வருகிறது.. எனினும், இது பண்டிகை காலம் என்பதால், இவைகளின் விலை குறைய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, எண்ணெய் நிறுவனங்கள் ஏடிஎஃப், சிஎன்ஜி, பிஎன்ஜி (ATF, CNG, PNG Prices) விலைகளில் மாற்றம் தெரிய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சமீப மாதங்களில் ஏடிஎஃப் விலைகள் குறைந்துள்ளதால், தீபாவளி முடிந்த நிலையில், விலைகள் மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications