இதுவே முஸ்லிமா இருந்தால்.. தீவிரவாத முத்திரை! வெடிபொருள் வைத்தது பாஜக நிர்வாகியாச்சே -காயத்ரி கேள்வி
சென்னை: கும்பகோணம் அருகே பாஜக மாநில நிர்வாகி வீட்டில் வெடி பொருட்கள் மற்றும் பயங்கர ஆயுதங்களை போலீசார் கைபற்றி இருக்கும் நிலையில், இதுவே வெடி பொருட்களை முஸ்லிம் வீட்டில் வைத்திருந்தால் தீவிரவாதி என்று முத்திரை குத்துவார்கள் என்று பாஜக முன்னாள் நிர்வாகியும் நடிகையுமான காயத்ரி ரகுராம் தெரிவித்து உள்ளார்.
பாஜக பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில செயலாளராக பதவி வகித்து வருபவர் கார்த்திகேயன். இவர் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த சாக்கோட்டை பகுதியை சேர்ந்தவர். இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன.

கடந்த 2016 ஆம் ஆண்டில் சக்கரவர்த்தி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கு கார்த்திகேயன் மீது உள்ளது. அதேபோல் 2017 ஆம் ஆண்டில் சிவானந்தம் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கும் பாஜக நிர்வாகி மீது நிலுவையில் உள்ளது. அத்துடன் அவர் மீது 2 கொலை முயற்சி வழக்குகளும் நிலுவையில் இருக்கின்றன.
இதன் காரணமாக கும்பகோணத்தை நாச்சியார் கோயில் காவல் நிலையத்தில் ரவுடிகள் பட்டியலிலும் கார்த்திகேயன் பெயர் சேர்க்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் கருப்பூர் பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் நிலம் கார்த்திகேயனின் வீட்டுக்கு பின்புறமாக அமைந்து உள்ளது. அந்த நிலத்திற்கு ஆசைப்பட்ட கார்த்திகேயன் தனக்கு 10000 சதுர அடி நிலத்தை எழுதித்தர வேண்டும் என்று சிவக்குமாரை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக நாச்சியார் கோயில் காவல் நிலையத்தில் கடந்த 26 ஆம் தேதி பாஜக நிர்வாகி கார்த்திகேயன் மீது சிவக்குமார் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் திருவிடைமருதூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையிலான 15 க்கும் மேற்பட்ட போலீசார் பாஜக நிர்வாகி கார்த்திகேயன் வீட்டுக்கு சென்று உள்ளனர். இதனை முன்கூட்டியே அறிந்த கார்த்திகேயன் அங்கிருந்து தப்பிச்சென்றார்.
கார்த்திகேயன் வீட்டுக்குள் சென்ற போலீசார் அங்கு தீவிர சோதனை மேற்கொண்டபோது சக்தி வாய்ந்த வெடிபொருட்கள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் போன்றவை இருந்துள்ளன. அவற்றுடன் டிவிஆர் கண்டிரோல் யூனிட் மற்றும் அவரது கார்த்திகேயனின் கார் போன்றவற்றை பறிமுதல் செய்த போலீசார் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். தப்பிச்சென்ற பாஜக நிர்வாகி கார்த்திகேயனை போலீசார் தேடி வருகிறார்கள்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் பாஜக முன்னாள் நிர்வாகி காயத்ரி ரகுராம், "அதே வீட்டில் ஆயுதம், வெடிகுண்டு பொருட்களை ஒரு முஸ்லிம் வைத்திருந்தால் என்ன நடக்கும்? என்ஐஏவை அழைத்து தீவிரவாதி என்று முத்திரை குத்துவார்கள். எல்லா மதத்தினருக்கும் அதுவே அளிக்கப்பட வேண்டும். இதற்கு அண்ணாமலை ஒன்றும் சொல்ல மாட்டார்.
இது அண்ணாமலையின் தலைமை. இந்த நபர் பாஜகவைச் சேர்ந்தவர் அல்ல என்றும், நீண்ட காலத்திற்கு முன்பு இடைநீக்கம் செய்யப்பட்டவர் என்றும் போலிக் கடிதம் எழுதுவார். வேறு நாட்டு மக்களும் பிற மதத்தினரும் நமக்கு ஆபத்தை விளைவிக்கும் போது பயங்கரவாதம் எனகிறோம். தனது மதம் மற்றும் சொந்த குடிமக்களுக்கு ஆபத்தை விளைவிப்பது பயங்கரவாதத்தை விட மோசமானது. சிந்திக்க வேண்டும்." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications