420மலை.. அண்ணாமலை பற்றி விளாசிய நிர்மல் குமார்? குறுக்கே புகுந்த காயத்ரி.. இப்படி சொல்றாரே!
அமைச்சரை வெளியில் வீராவேசமாக பேசிவிட்டு திரைமறைவில் பேரம் பேசும் நபருடன் எப்படி பயணிக்க முடியும்? என்று நிர்மல் குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை: பாஜகவில் அதன் ஐடி தலைவர் நிர்மல் குமார் வெளியேறியது குறித்து பாஜக முன்னாள் நிர்வாகி காயத்ரி ரகுமான் போஸ்ட் செய்துள்ளார்.
பாஜகவில் தீவிரமாக செயலாற்றி வந்த அதன் தகவல் தொடர்பு பிரிவு தலைவர் நிர்மல் குமார், கட்சியில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்தார். என்னால் முடிந்த வரை பல சங்கடங்களை கடந்து கடந்த 1.5 ஆண்டுகளாக பயணித்தேன்! உண்மையாக நேர்மையாக உழைத்தேன், வேதனை மட்டுமே மிச்சம். விடைபெறுகிறேன், என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.
அதோடு பாஜக தலைவர் அண்ணாமலையை நிர்மல் குமார் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அண்ணாமலை பெயரை குறிப்பிடாமல் அவரின் தலைமை குறித்து நிர்மல் குமார் விமர்சனம் செய்துள்ளார்.

ராஜினாமா
நிர்மல் குமார் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜக சகோதர சகோதரிகளுக்கு வணக்கம், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பலநூறு முறை சிந்தித்து இன்று நான் பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன். பல ஆண்டுகளாக எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் உண்மையாக, நேர்மையாக கட்சியின் வளர்ச்சிக்காக என்னால் முடிந்த வரை பணியாற்றினேன் இன்று விடைபெறுகிறேன். என் மீது நம்பிக்கை வைத்து என்னுடன் பயணித்த உங்களிடம் எனது இந்த முடிவிற்கான காரணத்தை தெரிவிப்பது எனது கடமை, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழக பாஜக தலைமை தொண்டர்களையும் கட்சியையும் செருப்பாக பயன்படுத்தி கட்சியை பற்றி துளியும் சிந்திக்காது, சொந்த கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் வேவு பார்த்து ஆனந்தம் அடைவதை போன்ற அல்பத்தனம் எதுவும் இல்லை.

தொண்டர்கள்
அதையும் தாண்டி தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள், கட்சி மற்றும் கமலாலயத்தின் ஒவ்வொரு செங்கலையும் வியாபாரமாக்கி இடத்திற்கேற்ப நடித்து ஏமாற்றி வரும் தலைமையை பார்த்து ஒவ்வொரு நாளும் வேதனை அடைந்தது தான் மிச்சம். தொண்டர்களை மதிக்காது தான்தோன்றி தனம் இவற்றுடன் "மனநலம் குன்றிய மனிதரை போல் செயல்படும் நபரால் கட்சி அழிவை நோக்கி செல்வதை ஒவ்வொரு நாளும் பார்க்க முடிகிறது. 2019யில் இருந்த கட்சி அமைப்பில் தற்போது 20% கூட இல்லை அதைப்பற்றி துளியும் கவலை இல்லாமல் மாய உலகத்தில் சுற்றி வரும் ஒரு நபரால் கள எதார்த்தத்தை என்றும் உணர முடியாது, அதை உணர்த்த முயன்று என்னை போன்று பலர் தோல்வியுற்றோம்.

திராவிட மாடல்
எல்லாவற்றிற்கும் மேலாக நான் ஒரு அமைச்சருடன் கடுமையான சட்ட போராட்டம் நடத்தி வரும் நிலையில் அந்த அமைச்சரை வெளியில் வீராவேசமாக பேசிவிட்டு திரைமறைவில் பேரம் பேசும் நபருடன் எப்படி பயணிக்க முடியும்? மொத்தத்தில் திராவிட மாடல் அமைச்சர்களேயே மிஞ்சும் அளவிற்கு ஒரு #420மலை யாக இருக்கும் நபரால் தமிழக பாஜகவிற்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே மிகபெரிய கேடு. தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள் மற்றும் கட்சியை ஏமாற்ற நினைக்கும் ஒரு தலைமையை நம்பி எப்படி பயணிக்க முடியும்? , என்று குறிப்பிட்டு உள்ளார்.

காயத்ரி ரகுராம்
நிர்மல் குமார் வெளியேறியது குறித்து பாஜக முன்னாள் நிர்வாகி காயத்ரி ரகுமான் போஸ்ட் செய்துள்ளார். இந்த அறிக்கையை பகிர்ந்து உள்ள காயத்ரி ரகுராம், உங்களை போல கடின உழைப்பாளி பாஜகவில் இருந்து வெளியேறுவது வருத்தம் தருகிறது. பாஜகவிற்கு இது பெரிய லாஸ் என்று கூறியுள்ளார். முன்னதாக காயத்ரி ரகுராம் பாஜகவில் நடக்கும் உட்கட்சி மோதல்கள் குறித்து அதிரடி கருத்துக்களை தெரிவித்து வந்தார். பல சீனியர்கள் அமைதியாக புழுங்கிக்கொண்டு இருந்த நிலையில் காயத்ரிதான் இதில் வெளிப்படையாக பல்வேறு விஷயங்களை பகிர்ந்து வந்தார். இதனால் அவர் கட்சியில் இருந்தும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். காயத்ரிக்கும் அண்ணாமலைக்கும் இடையில் நேரடியாக மோதல் ஏற்பட்டது. இதையடுத்து பாஜகவில் இருந்தும் காயத்ரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதன்பின் அவர் கட்சியில் இருந்தும் வெளியேறினார்.












Click it and Unblock the Notifications