"அவங்கள தூண்டிவிடுறது தவறாக படுது".. அண்ணாமலைக்கு காயத்ரி ரகுராம் பதிலடி.. சொல்றதை கவனிச்சீங்களா!
சென்னை: அண்ணாமலை வெளியிட்ட திமுகவினரின் சொத்து பட்டியல் எல்லாமே மக்களுக்கு தெரிந்த ஒன்று தான், அதில் புதிதாக எதுவும் இல்லை என்று நடிகையும், நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமையான நேற்று திமுகவின் சொத்து மற்றும் ஊழல் பட்டியலை பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார்.

இது தொடர்பாக அவர் சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, திமுகவினர் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.
அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, திமுக எம்.பி கனிமொழி கருணாநிதி, கலாநிதி மாறன், டி ஆர்.பாலு, அமைச்சர் துரைமுருகன், வடசென்னை எம்.பி கலாநிதி வீராசாமி, அமைச்சர் பொன்முடி, அமைச்சர் அன்பில் மகேஷ், முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மருமகன் சபரீசன் மற்றும் திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோரின் சொத்து பட்டியல் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் சொத்து பட்டியல் தொடர்பான விவரங்கள் அடங்கிய வீடியோவை அண்ணாமலை நேற்று வெளியிட்டார். இதன்படி திமுகவின் சொத்து மதிப்பு ரூ.1.31 லட்சம் கோடி என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
இந்நிலையில் அண்ணாமலையின் இந்த பட்டியலுக்கு நேற்று திமுக பதிலடி கொடுத்தது. சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி.க்கள் பி.வில்சன், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்தனர்.
அப்போது ஆர்.எஸ்.பாரதி கூறுகையில், அண்ணாமலை எந்த ஒரு ஊழல் குற்றச்சாட்டையும் ஆதாரத்துடன் சொல்லவில்லை. இப்படிப்பட்ட ஒருவரை எப்படி காவல் துறையில் வைத்திருந்தார்கள் என்று சந்தேகமாக இருக்கிறது . அவர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ள அனைவருமே தேர்தலில் போட்டியிட்டவர்கள். தேர்தலில் போட்டியிடும்போது வேட்பாளர்கள் சொத்துக் கணக்கை தெரிவிக்க வேண்டும் என்பது கட்டாயம். முதல்வர் ஸ்டாலின், டி.ஆர்.பாலு, துரைமுருகன் உள்ளிட்ட எல்லோரும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.
அதில் தெரிவிக்கப்பட்ட சொத்து தொடர்பாக விதிமீறல் இருந்தால், சாதாரண வாக்காளர்கூட தேர்தல் முடிவை எதிர்த்து வழக்கு தொடரலாம். அண்ணாமலை யார் யார் மீது குற்றம்சாட்டியுள்ளாரோ, அவர்கள் அண்ணாமலை மீது வழக்கு தொடருவார்கள். இனிமேல், பாஜகவுக்காக சுற்றுப்பயணம் செய்வதைவிட, நீதிமன்றங்களுக்கு அண்ணாமலை சுற்றுப்பயணம் செய்வதுதான் அதிகமாக இருக்கும் என்றார்.

இந்நிலையில் நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் அண்ணாமலையின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அவர் நேற்று செய்தியாளர்களிடம் பேசும் போது, அண்ணாமலை வெளியிட்ட பட்டியலில் புதிதாக எதுவும் இல்லை. அப்படி இருந்திருந்தால், அவர் ஜனவரியிலேயே காண்பித்து இருப்பார். அவர் ஜனவரியில் காண்பிக்காமல் இப்போது வந்து எதையோ காட்டியிருக்கிறார்.
இதெல்லாம் மக்களுக்கு ஏற்கனவே தெரிந்த ஒன்று தான்.2ஜிய பற்றி காட்டுறமாதிரி பண்ணியிருக்கிறார். அவர் சொல்லிய எல்லாமே கோர்ட்டில் இருக்கிற விஷயம். இதுவரை வருமான வரித்துறை உள்ளிட்ட எந்த அமைப்பும் விசாரணை நடத்தாத விஷயத்தை வெறும் குற்றச்சாட்டாக மட்டுமே எடுத்து வைத்துக்கொண்டிருப்பது சரி என்று படவில்லை.
அதுமட்டுமல்ல, அவர் வெளியிட்ட திமுக பைல்ஸ் வீடியோவில் திமுகவின் போட்டோ ஆல்பம், நம்ம சிஎம்முடைய குடும்பத்தின் புகைப்படங்களை எடுத்து போட்டுவிட்டு, இவர்களின் படத்தை நான் போடுவேன் என்று கூறுகிறார். அவர்கள் எம்எல்ஏவோ, அல்லது எம்பியோ இல்லை கவுன்சிலராகவோ இல்லாதவங்களோட புகைப்படத்தை எடுத்து போட்டுவிட்டு அவங்கள தூண்டிவிடுறது தவறாக படுது.. என்று காயத்ரி ரகுராம் கூறினார்.












Click it and Unblock the Notifications