பட்டுனு ஏறிய தங்கம் விலை.. ஆனா அடுத்த வாரமே குறைய வாய்ப்பு இருக்கு.. ஆனந்த் சீனிவாசன் ஹேப்பி நியூஸ்
சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே மெல்ல அதிகரித்து வருகிறது. இது வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கவே வாய்ப்பு இருப்பதாக வல்லுநர்கள் கூறுகிறார். அதேநேரம் ஒரு விஷயம் நடந்தால் அடுத்த வாரம் தங்கம் விலை கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளதாகப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் கூறியுள்ளார். அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே கணிசமாக அதிகரித்து வருகிறது. இடையில் சற்று குறைந்தாலும் கூட மீண்டும் உயர ஆரம்பித்துவிட்டது. வரும் காலத்திலும் தங்கம் விலை அதிகரிக்கும் என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.

தங்கம் ரேட்: இந்தியாவில் தங்கம் தான் பிரதான சேமிப்பாக ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு இருக்கும் நிலையில், இது ரொம்பவே முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இதற்கிடையே ஒரு சில விஷயங்கள் நடந்தால் தங்கம் விலை அடுத்த வாரம் குறைய வாய்ப்புள்ளதாகப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், "தங்கம் விலை (நேற்று) ரூ.6830க்கு இருக்கிறது. இதற்கு மேல் ஜிஎஸ்டி, வரி, செய்கூலி எல்லாம் சேர்ந்தால் ஒரு கிராம் ரூ 7600 வரை செல்லலாம்... பரவாயில்லை கொஞ்சம் நிலையாகவே இருக்கிறது. தங்கம் இன்னும் அதிகரிக்கும். அடுத்த வருடம் ரூ. 8500 வரை கூட செல்ல வாய்ப்பு இருக்கிறது. உங்களுக்கு அடுத்த சில ஆண்டுகளுக்குப் பணம் தேவையில்லை என்றால் தங்கத்தை வாங்கலாம் நல்ல லாபம் கிடைக்கும்" என்றார்.
குறைந்து இருக்கு: அதேபோல அவர் தனது மற்றொரு வீடியோவில், "மும்பையில் உள்ள ஜவேரி பஜார் தான் ஆசியாவிலேயே மிகப் பெரிய தங்க மார்கெட். அவர்களே ஏப்ரல்- ஜூன் காலகட்டத்தில் தங்கம் விலை 15% குறைந்துள்ளதாகக் கூறுகிறார்கள். தங்கம் விலை ஓராண்டில் 20% அதிகரித்ததால் ஒட்டுமொத்த வருமானம் சற்று அதிகரித்திருக்கலாம். ஆனால், தங்கம் வாங்குவது குறைந்துள்ளது.
இந்தியாவில் தங்கம் இரண்டு வகையில் வரும்.. ஒன்று அதிகாரப்பூர்வமாக வரி செலுத்தி எடுத்து வருவது. மற்றொன்று முறைகேடாகக் கடத்தி வருவது. சென்னை ஏர்போர்ட்டில் கூட 3 மாதங்களில் இதுபோல தங்கத்தை முறைகேடாகக் கடத்தியுள்ளனர். நமது நாட்டில் சுமார் 15% டியூட்டி வரி, அதற்கு மேல் ஜிஎஸ்டி.. இதனால் ஒரு கிராம் தங்கத்திற்கு சுமார் ரூ.1000 கூடுதலாகச் செலுத்த வேண்டி இருக்கிறது. வரி அதிகமாக இருப்பதாலே தங்கம் கடத்தல் அதிகரிப்பதாகச் சிலர் கூறுகிறார்கள்.
குறைய வாய்ப்பு இருக்கு: இது ஒரு பக்கம் இருக்க வழக்கமாகத் தங்கம் வாங்குவோர் இப்போது தங்கம் வாங்குவதில்லை என்று நகை விற்பனையாளர்கள் கூறுகிறார்கள். இந்த பட்ஜெட்டில் மத்திய அரசு அந்த 15% டியூட்டியை நீக்குவார்கள் என்றும் இதனால் தங்கம் விலை குறையும் என மக்கள் நம்புகிறார்கள்.
இதன் காரணமாகவே பலரும் தங்கம் வாங்காமல் காத்திருக்கிறார்களாம். இது நடந்தாலே தங்கம் விலை குறைய வாய்ப்பு இருக்கிறது. ஜூலை 23ம் தேதி பட்ஜெட் தாக்கலாக உள்ளது. அப்போது நமக்குத் தங்கம் விலை குறையுமா இல்லையா என்பது தெரிந்துவிடும்" என்று அவர் தெரிவித்தார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications