தங்கம் விலை குறையுமா? 10 மாதங்களில் ரூ.30,000 ஏறிடுச்சே.. நிபுணர்கள் சொல்வது இதுதான்
சென்னை: செய்கூலி, சேதாரம் எல்லாம் போட்டு பார்த்தால் ஒரு சவரன் தங்க நகையின் விலை ரூ.1 லட்சத்தை தொட்டிருக்கிறது. இதனால் சாதாரண மக்களுக்கு தங்கம் எட்டாத உயரத்திற்கு சென்றிருக்கிறது. எவ்வளவுதான் ஏறும்? ஒரு நாள் இறங்காதா? என்று பலரும் தங்கம் விலை குறித்து பேசி வருகின்றனர். ஆனால் விலை குறைவதற்கான வாய்ப்புகள் கம்மி என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
கடந்த 10 மாதங்களில் மட்டும் தங்கம் சவரனுக்கு ரூ.30,000 அதிகரித்திருக்கிறது. கடந்த ஓராண்டில் மட்டும் இதன் விலை 40-55% வரை அதிகரித்திருக்கிறது. கடந்த 6 மாதங்களை எடுத்துக்கொண்டால் 35-45% வரையும், கடந்த 30 நாட்களை எடுத்துக்கொண்டால் 7-12% வரையும் தங்கம் விலை உயர்ந்திருக்கிறது. தங்கம் விலை குறையுமா? என்பதை தெரிந்துக்கொள்ள ஏன் விலை அதிகரித்தது? என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.

1. சர்வதேச நாடுகளில் பதற்றம்
2. பெடரல் ரிசர்வ் வட்டி விகிதம் குறைப்பு
சர்வதேச நாடுகளில் பதற்றம்
இந்த இரண்டும்தான் தங்கம் விலை உயர மிக முக்கியமான காரணம். அதாவது பிரான்ஸ் மற்றும் ஜப்பானில் நிலவும் அரசியல் குழப்பங்கள், ரஷ்யா-உக்ரைன் போர் போன்ற மோதல்கள் பாதுகாப்பான முதலீடுகளுக்கான தேவையை அதிகரித்துள்ளன. சீனாவின் மக்கள் வங்கி உட்பட பல மத்திய வங்கிகள் தங்கத்தை தீவிரமாக வாங்கி வருகின்றன. இது விலைகளை மேலும் உந்தித் தள்ளியுள்ளது. ரிலேட்டிவ் ஸ்ட்ரென்த் இன்டெக்ஸ் போன்ற தொழில்நுட்ப குறிகாட்டிகள், தங்கம் விலை சிறிய அளவில் சரிவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், எதிர்காலத்தில் இது மேலும் விலை உயர்ந்துக்கொண்டேதான் இருக்கும் என்று கணித்திருக்கின்றன.
இந்த ஆண்டு விலை உயருமா?
பொருளாதார நிலை சீராக இல்லாதது, புவிசார் அரசியல் அபாயங்கள் மற்றும் மத்திய வங்கிகளின் கொள்முதல்கள் ஆகியவை 2025 ஆம் ஆண்டு முழுவதும் தங்கத்தின் விலையை உயர்வாகவே வைத்திருக்க வாய்ப்புள்ளது. அமெரிக்க டாலரின் பலவீனம் வெளிநாட்டு வாங்குபவர்களுக்கு தங்கத்தை மலிவாக்குகிறது, இதுவும் தேவை அதிகரிப்புக்கு ஒரு காரணம்.
விலை உயர்வு ஏன்?
அமெரிக்க டாலருக்கும் தங்கம் விலைக்கும் இடையே உள்ள தொடர்பை சிம்பிளாக புரிந்துக்கொள்ள உதாரணத்தை சொல்கிறேன். தங்கம் விலை அமெரிக்க டாலரில்தான் நிர்ணயிக்கப்படும். ஒரு அவுன்ஸ் தங்கம் 2 டாலர் எனில், முதலில் நம்முடைய ரூபாயை டாலராக மாற்ற வேண்டும். பின்னர், டாலரை கொண்டு தங்கம் வாங்க வேண்டும். இன்னைக்கு தேதியில் ரூ.88.77 கொடுத்தால் ஒரு டாலர் வாங்க முடியும். ஆனால் டாலரின் மதிப்பு ரூ.70 ஆக குறைகிறது எனில், நம் ஆட்கள் அதிக அளவில் டாலரை வாங்குவார்கள்.
பின்னர், அதை கொண்டு தங்கத்தை வாங்குவார்கள். தங்கம் விலை ஒரு அவுன்சு 2000 டாலராகத்தான் இருக்கும். ஆனால், டாலரின் மதிப்பு குறைவதால் தங்கம் அதிகமாக கொள்முதல் செய்யப்படும். டிமாண்ட் அதிகம் உள்ள பொருட்களின் விலை உயரும் என்பது விதி. எனவே தங்கத்தின் விலையும் அதிகரித்து வருகிறது.
டாலர் மதிப்பு சரிவும் தங்கம் விலை உயர்வும்
சரி டாலர் மதிப்பு எப்படி குறைகிறது? சீனா போன்ற நாடுகள் தங்கள் வசம் உள்ள டாலரை வேகமாக விற்று வருகிறது. அதிக அளவில் டாலர் வெளியில் வருவதால் அதன் மதிப்பு சரிகிறது. அதேபோல அமெரிக்க நாட்டின் மத்திய வங்கியான, பெடரல் ரிசர்வ் வங்கி தனது வட்டியை குறைத்திருக்கிறது. வட்டி அதிகமாக இருந்தால், சொத்து மீது அதிக லாபம் கிடைக்கும். எல்லோரும் இடத்தின் மீதோ, வீட்டின் மீதோ முதலீடு செய்வார்கள். ஏனெனில் வட்டி அதிகம். அதுவே வட்டி குறையும்போது தங்கத்தை நோக்கி ஓடுவார்கள். இப்போது இதுதான் நடந்துக்கொண்டிருக்கிறது. எனவேதான் தங்கத்தின் விலை அதிகரித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications