சென்னை மக்களுக்கு ஒரு நற்செய்தி.. தீவுத்திடல் உணவு திருவிழா மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு
சென்னை: சென்னை தீவுத்திடலில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த மாதம் 28ஆம் தேதி கைவினை மற்றும் உணவுத் திருவிழாவை தொடங்கி வைத்தார். இந்த திருவிழா தற்போது மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் தமிழக சுற்றுலாத் துறை சார்பில் சென்னை தீவுத்திடலில் கைவினை, உணவுத் திருவிழா நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு முறையும் கோடை விடுமுறையில் இந்த விழா நடைபெறும்.

அது போல் இந்த ஆண்டும் உணவுத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த மாதம் 28ஆம் தேதி தொடங்கி வைத்தார். தீவுத்திடலில் சென்னை விழா நுழைவுக் கட்டணமாக ரூ 10 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த விழாவில் வகை வகையான உணவுகள், வித்தியாசமான கைவினை பொருட்கள் இடம் பெற்றன. இதற்காக 311 அரங்குகள் அமைக்கப்பட்டு வெளிநாடுகள் சார்பில் 30 அரங்குகள் ஒதுக்கப்பட்டன. மேலும் 20 மாநிலங்களில் இருந்து 83 அரங்குகளும் கோ ஆப்டெக்ஸ், கைத்தறி துறை உள்ளிட்டவை இணைந்து 70 அரங்குகளும் அமைத்து தங்களது பொருட்களை காட்சிப்படுத்தின.
உணவு பொருட்களுக்காக 40 ஸ்டால்கள் அமைக்கப்பட்டன. இங்கு 100 க்கும் மேற்பட்ட உணவு பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டன. நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் தீவுத்திடலுக்கு வந்து மகிழ்ச்சி அடைகிறார்கள். பனாரஸில் கையால் நெய்யப்பட்ட புடவைகள் முதல் ராஜஸ்தானில் கைவேலைப்பாடுகளுடன் கூடிய பொருட்கள் என கைவினை பொருட்களும் இந்த திருவிழாவில் அமைந்துள்ளது.
மேலும் தமிழகத்தில் காஞ்சிபுரம், ஆரணி, பட்டு புடவைகள்ஸ பவானி ஜமக்காளம், தஞ்சை ஓவியம், கும்பகோணம் ஐம்பொன் சிலைகள், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை உள்ளிட்டவை உள்ளன. அத்துடன் நாள்தோறும் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இந்த திருவிழை இன்றுடன் முடிவடையவிருந்த நிலையில் தற்போது மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
வரும் 21 ஆம் தேதி வரை தீவுத்திடலில் சென்னை உணவு திருவிழா நடத்தப்படும். தினந்தோறும் தீவுத்திடலுக்கு மக்கள் அலையென திரண்டு வருவதால் மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications