பெருங்களத்தூர் போறவங்களுக்கு நற்செய்தி! கிழக்கு தாம்பரம் புறவழிச்சாலை திட்டம் மீண்டும் தொடங்கியது
சென்னை: சென்னையின் தெற்கு நுழைவு பகுதியான பெருங்களத்தூரில் நீண்ட காலமாக நீடித்து வரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக, கிழக்கு தாம்பரம் புறவழிச்சாலை திட்டம் மீண்டும் வேகமெடுத்துள்ளது.. தென் மாவட்டங்களிலிருந்து சென்னை வரும் கனரக வாகனங்கள் இனி பெருங்களத்தூர் மற்றும் தாம்பரம் பகுதிகளில் நுழையாமல் மாற்றுப்பாதையில் செல்லும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.. பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வரும் பெருங்களத்தூர் போக்குவரத்துக்கு இந்தச் சாலை ஓரளவு தீர்வு தரும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் உள்ளது..!!
மொத்தம் 9 கிலோமீட்டர் நீளத்தில் 6 வழிச்சாலையாக உருவாகும் இந்த கிழக்கு தாம்பரம் புறவழிச்சாலை திட்ட பாதையானது, ஜிஎஸ்டி சாலையில் உள்ள பீர்க்கன்காரணை பழைய காவல் நிலையம் அருகே தொடங்கி, சதானந்தபுரம், ஆலப்பாக்கம், நெடுங்குன்றம், திருவஞ்சேரி, ராஜகீழ்ப்பாக்கம் மற்றும் சேலையூர் வழியாக தாம்பரம் - வேளச்சேரி சாலையை இணைக்கிறது.. இதன் மூலம் தென்சென்னை மற்றும் ஐ.டி. வழித்தட பகுதிகளுக்கு நேரடி இணைப்பு கிடைக்கிறது.

பெருங்களத்தூர் நற்செய்தி
இந்த திட்டம் புதிதாக தொடங்கியதல்ல.. கடந்த 10 ஆண்டுகளாக இடைவிடாமல் பேசப்பட்டு வந்தாலும், நிலம் கையகப்படுத்தல் மற்றும் அனுமதி பிரச்னைகளால் மெதுவாகவே நகர்ந்தது.
2013ம் ஆண்டே சேலையூர் முதல் திருவஞ்சேரி வரை 3 கிலோமீட்டர் நீளப்பகுதியில் 27.5 கோடி ரூபாய் செலவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.. தொடர்ந்து திருவஞ்சேரி முதல் மப்பேடு வரை 1.4 கிலோமீட்டர் பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.. பெருங்களத்தூர் முதல் அகரம் தென் சாலை சந்திப்பு வரை 26 கட்டிடங்கள் அகற்றப்பட்டதுடன் 23 இடங்களில் நிலங்களும் கையகப்படுத்தப்பட்டு சாலை அமைப்பு பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
கிழக்கு தாம்பரம் புறவழிச்சாலை திட்டம்
இப்போது அகரம் தென் சாலை அம்பேத்கர் நகர் சந்திப்பிலிருந்து ராஜகீழ்ப்பாக்கம் ஏரி வழியாக வேளச்சேரி சாலை வரை 1,442 மீட்டர் நீளத்தில் 6 வழிச்சாலை மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கியுள்ளன..
"208.31 கோடி ரூபாய் செலவில் 23 மீட்டர் அகலத்தில் கட்டப்படும் இந்த மேம்பால பணிகளை 18 மாதங்களில் முடிக்க அதிகாரிகள் இலக்கு வைத்துள்ளனர்.. இதற்காக ராஜகீழ்ப்பாக்கம் ஏரி பகுதியில் இருந்த 126 கட்டிடங்கள் அகற்றப்பட்டு தற்போது அடித்தள பணிகள் நடக்கின்றன.
இனி நோ டிராபிக்
இந்த சாலை முழுமையாக ரெயாகிவிட்டால் பெருங்களத்தூரிலிருந்து நெடுங்குன்றம், சதானந்தபுரம், ஆலப்பாக்கம், திருவஞ்சேரி, சேலையூர் வழியாக கனரக வாகனங்கள் நேரடியாக வேளச்சேரி சாலையை அடையலாம்.. தாம்பரம், பெருங்களத்தூர் பகுதிகளில் தினமும் சிக்கும் வாகன நெரிசல் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருந்தாலும் திட்டம் இன்னும் முழுமையாக நிறைவு பெறவில்லை.. 4.46 ஹெக்டேர் வனத்துறை நிலம் பெறுவதற்கான அனுமதியும், 8.92 ஹெக்டேர் மாற்று நில ஒதுக்கீடும் இன்னும் முடியாமல் உள்ளதால் சில பணிகள் தாமதமாகியுள்ளன.. 2013 முதல் பேசப்பட்டு வரும் இந்தத் திட்டம் இனியாவது தடையின்றி முன்னேறுமா என்று பெருங்களத்தூர் மக்கள் காத்திருக்கின்றனர்..!!












Click it and Unblock the Notifications