ஆளுநர்களை முதலில் ஆளுநர்களாக நடத்துங்கள்.. எங்களுக்கும் கருத்து உரிமை இருக்கு..தமிழிசை சவுந்தரராஜன்
சென்னை: மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே பாலமாக மட்டும் இல்லை. பலமாகவும் ஆளுநர்கள் இருக்கிறார்கள் என்றும் ஆளுநர்களை முதலில் ஆளுநர்களாக நடத்துங்கள் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் பேசியுள்ளார்.
தெலுங்கானா மற்றும் புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பெண்களுக்கு 2 மணிநேரம் நேர சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இது பெண்களுக்கு மிகுந்த வரவேற்பை கொடுத்துள்ளது. அதுபோல பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அறிவிக்காமலே கொடுக்கப்பட்டு உள்ளது. பல நல்ல திட்டங்களை புதுவையில் முன்னெடுத்து செல்கிறோம். கர்நாடக தேர்தல் பிரசாரம் குறித்து கேள்வி கேட்கிறீர்கள்.
நான் நேரடி அரசியலில் இல்லை. தேர்தலை பற்றி நான் சொல்லவும் முடியாது. எனவே அதில் நான் கருத்து சொல்ல முடியாது. நமது அரசியல் அமைப்பு சட்டத்தில் ஆளுநர் பதவி என்ற பதவி இருக்கிறது. இவர்கள் ஆட்சி செய்த போது ஆளுநர் பதவி தேவையில்லை என்ற முடிவுக்கு வந்து இருக்கலாம்.. புதிதாக யாரும் ஆட்சிக்கு வரவில்லை.
இரண்டாவது.. எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஆளுநர் தேவையில்லை என்றால் ராஜ்பவன் படிகளையே மிதித்து இருக்கக் கூடாது. எதற்கெடுத்தாலும் ராஜ்பவன் போய்.. அங்கே வந்து புகார்களை கொடுத்து விட்டு.... எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஆளுநர் வேண்டும்.. ஆளும் கட்சியாக வந்த பிறகு ஆளுநர் வேண்டாம்.. முதலில் நீங்கள் ஒரு முடிவுக்கு வாருங்கள்.
எதிர்க்கட்சியாக இருக்கும் போதும் ஆளும் கட்சியாக இருக்கும் போது ஆளுநர்கள் எப்படி இருக்க வேண்டும் என்ற ஒரு முடிவுக்கு வாருங்கள். எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஆளுநரிடம் அடிக்கடி புகார் கொடுத்தீர்கள். உங்கள் எண்ணத்திலேயே நிலையற்ற தன்மை.. நேரத்திற்கு ஏற்ப நீங்கள் பேசுகிறீர்கள் என்று தான் என்னால் சொல்ல முடியும்.
ஆளுநராக தேர்தல் கருத்து சொல்ல மாட்டேன். ஆனால், அரசியல் ரீதியாக சில கருத்துக்கள் சொல்ல வேண்டும் என்றால் யாரும் தடுக்க முடியாது. கருத்துரிமை உள்ளது. சாதாரண மனிதருக்கு கருத்துரிமை இருப்பதை போலவே ஆளுநருக்கும் கருத்து உரிமை உள்ளது. கருத்து சொல்வதில் யாரையும் யாரும் தடுக்க முடியாது. எதிர்க்கருத்து வேண்டும் என்றால் சொல்லுங்கள்.
ஆனால் ஜனநாயக நாட்டில் நான் கருத்தே சொல்ல முடியாது என்று சொல்ல முடியாது. நான் கூட அரசியல் பேசுவேன். வேண்டியிருந்தால் பேசுவேன். ஆளுநரை தொடர்ந்து விமர்சனம் செய்து கொண்டு இருந்தால் அதற்கு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். அவர்( தமிழக ஆளுநர்) சில விளக்கம் கொடுத்து இருக்கிறார். நமக்கு வேண்டிய கருத்துக்கள் சொல்லப்பட்டால் அது கருத்துரிமை..
ஆனால் வேண்டாத கருத்துக்கள் சொன்னால் உடனே அந்த படத்தை தடை செய்ய வேண்டும். இதுதான் கருத்துரிமையாக உள்ளது. இன்னொரு ஆளுநர் எடுத்த முடிவு பற்றியோ அதற்காக எடுத்த கால அவகாசத்தை பற்றியோ என்னால் கருத்து சொல்ல முடியாது. ஆனால், ஆளுநர்கள் எல்லோருக்கும் கால அவகாசம் இருக்கிறது. எனவே அதை ஆராய நேரம் எடுத்துக்கொள்ளலாம்.
மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே பாலமாக மட்டும் இல்லை. பலமாகவும் ஆளுநர்கள் இருக்கிறார்கள். ஆளுநர்களை முதலில் ஆளுநர்களாக நடத்துங்கள்.. ஆளுநர்களை ஆளுநர் மாதிரி நடத்தாமல் அவர் ஆளுநர் மாதிரி அவர் செயலாற்ற வேண்டும் என்றால் எப்படி என்பதுதான் எனது கருத்து. சில கருத்துக்கள் சொல்லும் போது எதிர்க்கருத்துக்கள் சொல்லலாம். ஆனால் கடுமையாக விமர்சனம் செய்வது சரியில்லை. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications