“திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க வந்தால் ஏற்பீர்களா?”.. கேள்விக்கு ஆளுநர் அர்லேகர் சொன்ன பதில்!
சென்னை: 118 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் வரும் கட்சியை ஆட்சி அமைக்க அழைக்கத் தயார், ஆட்சி அமைக்க உரிமை கோரும் கட்சி, தம்மிடம் போதுமான எண்ணிக்கையில் பலம் இருக்கிறது என்பதையும், தங்களால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்பதையும் எனக்குத் திருப்திப்படுத்தும் வகையில் தெரிவித்தால் போதும் என தனியார் செய்தி நிறுவனத்திற்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பேட்டி அளித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. தவெக ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை இடங்களை பெற்றிராத நிலையில், அக்கட்சிக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்தது. இதன் மூலம் தவெக ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 112 ஆக அதிகரித்துள்ளது. தவெக பெரும்பான்மை பெற இன்னும் 6 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை.

இந்தச் சூழலில், தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற தவெக, ஆளுநர் அர்லேகரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியது. ஆனால், ஆளுநர், விஜய்யை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கவில்லை. 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருக்கிறதா எனக் கேட்டுள்ளார். இது தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், ரிபப்ளிக் டிவியின் அர்னாப் கோஸ்வாமியுடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலின்போது, இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பளிப்பது சரியாக இருக்காதா? என்ற அர்னாப்பின் கேள்விக்கு ஆளுநர் பதில் அளித்துள்ளார்.
"நான் இப்போதே இந்த குழப்பத்தை முடிக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால், ஆட்சி அமைக்க உரிமை கோரும் கட்சி, தம்மிடம் போதுமான எண்ணிக்கையில் பலம் இருக்கிறது என்பதையும், தங்களால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்பதையும் எனக்குத் திருப்திப்படுத்தும் வகையில் தெரிவிக்க வேண்டும். இது ஒன்றுதான் எனது நிபந்தனை" எனக் கூறியுள்ளார்.
மேலும் பேசியுள்ள அர்லேகர், "எந்த ஒரு கட்சியோ அல்லது கூட்டணியோ ஆட்சி அமைக்க என்னிடம் வரும்போது, போதுமான பலம் எங்களிடம் இருக்கிறது என்று என்னிடம் சொல்ல வேண்டும். நான் அவர்களின் தலையை எண்ணப்போவதில்லை, அது சட்டசபையில்தான் நடக்கும்." எனத் தெரிவித்துள்ளார்.
அதிமுக, திமுக மற்றும் பிற கட்சிகள் இணைந்து வந்து 118 என்ற பெரும்பான்மையைக் காட்டினால் நீங்கள் அதை ஏற்பீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள ஆளுநர் அர்லேகர், "மெஜாரிட்டி எண்ணிக்கையுடன் யாராவது வந்தால், நான் அதைச் சரிபார்க்க வேண்டும். அதுதான் ஜனநாயக முறை" எனக் கூறியுள்ளார்.
தேர்தல் முடிவுகள் வந்து சில நாட்கள் ஆகிவிட்ட நிலையில் 118 என்ற மெஜாரிட்டி எண்ணிக்கையுடன் ஒரு கட்சி ஆட்சி அமைக்க வரும் வரை நீங்கள் எவ்வளவு காலம் காத்திருப்பீர்கள்? என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள அர்லேகர், "நான் அடுத்த நாளே பதவியேற்பு நடத்தத் தயாராக இருந்தேன். ஆனால் சூழ்நிலை அதற்கு இடம் கொடுக்கவில்லை. இன்று எனக்குத் தேவையான எண்ணிக்கை கிடைத்தால் நாளைக்கே நான் பதவியேற்பு நடத்தத் தயார்." எனக் கூறியுள்ளார்.
அடுத்த 2-3 நாட்களுக்கு யாரும் ஆட்சி அமைக்க உரிமை கோர வராவிட்டால் என்ன நடக்கும் என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள அர்லேகர், "அப்போது என்னிடம் உள்ள மற்ற ஆப்ஷன்களை பார்க்கவேண்டும்." எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications