4 மணி நேரம் ரொம்ப முக்கியம்.. ஆளுநர் ரவியின் "ரிட்டர்ன்".. தயாராகும் ஏற்பாடுகள்.. அந்த ஒரு கேள்வி!
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ரவியின் ஊட்டி பயணம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. துணை வேந்தர்கள் நியமன மசோதாவை தமிழ்நாடு அரசு நிறைவேற்றி உள்ள நிலையில், இந்த பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.
ஆளுநர் ஆர். என் ரவி தற்போது ஊட்டிக்கு பயணம் மேற்கொண்டு இருக்கிறார். கடந்த 25 மற்றும் 26 தேதிகளில் ஊட்டியில் ஆளுநர் ரவி தலைமையில் துணை வேந்தர்கள் மாநாடு நடைபெற்றது.
மத்திய, மாநில, தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர். திமுகவினர் இடையே இந்த மாநாடு கடும் எதிர்ப்பலைகளை சந்தித்தது.
நன்னிலம் கோவில் பூக்குழி திருவிழா... கரகத்தோடு தீயில் விழுந்த பக்தர் - 2 பேர் படுகாயம்
எதிர்ப்பு
இணை வேந்தரான உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை அழைக்காமல் இந்த கூட்டத்தை நடத்துவதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில்தான் ஆளுநருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழ்நாடு அரசு துணை வேந்தர்கள் நியமன மசோதாவை நிறைவேற்றியது. ஆளுநர் ஆர் என் ரவிதான் தற்போது தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு வேந்தர். இது அரசியலமைப்பு வழங்கிய உரிமை இல்லை என்றாலும், மாநில அரசுகள் மூலம் வழங்கப்பட்டுள்ள உரிமை ஆகும்.
மசோதா
இந்த நிலையில்தான் தமிழ்நாடு அரசே தமிழ்நாட்டு பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களை நியமிக்க வகை செய்யும் சட்ட மசோதா தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இது தற்போது ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை இந்த மசோதாவை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பவில்லை. இந்த மாநாடு முடிந்தும் ஆளுனர் ரவி ஊட்டியில் தங்கி இருக்கிறார்.
5 நாட்கள்
2 நாள் மாநாடு போக மேலும் 5 நாட்கள் அவர் ஊட்டியில் தங்கி இருக்கிறார். நாளையோடு ஆளுநரின் ஊட்டி பயணம் முடிவடையும் நிலையில், நாளை காலை அவர் கோவை புறப்படுகிறார். நீலகிரி கோத்தகிரி வழியாக அவர் கோவை வருகிறார். அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு வருகிறார். இதனால் நாளை கலாய் கோத்தகிரி சாலை மூடப்பட உள்ளது. 9-1 மணி வரை 4 மணி நேரம் சாலை மூடப்பட உள்ளது.
மக்கள் செல்ல முடியாது
இந்த சாலையில் 4 மணி நேரம் மக்கள் செல்ல முடியாது. முன்னதாக ஆளுநருக்கு எதிராக மயிலாடுதுறையில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதேபோல் அவர் கோவை சென்ற போதும் இதேபோல் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் ஆளுனர் ரவி காரில் செல்லும் 4 மணி நேரம் முக்கியம் என்பதால், பாதுகாப்பு கருதி மற்ற வாகனங்கள் அங்கே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேள்வி
இந்த நிலையில் ஆளுநர் ரவி சென்னை வந்ததும்.. துணை வேந்தர்கள் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே நீட் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பவில்லை. நீட் மசோதாவோடு சேர்த்து 9 மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. இப்போது துணை வேந்தர் நியமன மசோதா 10வதாக சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.