ட்விஸ்ட்! ஸ்டாலின் அனுப்பிய ஃபைல்.. திடீரென டெல்லிக்கு பறக்கும் ஆளுநர்.. அப்போ பொன்முடி பதவியேற்பு?
சென்னை: பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்குமாறு ஆளுநர் ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை கடிதம் அனுப்பிய நிலையில், திடீரென டெல்லிக்கு பறக்க உள்ளார் ஆளுநர்.
முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டின் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 1 கோடியே 72 லட்சம் சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவர்கள் இருவரும் சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

சுப்ரீம் கோர்ட் ஆர்டர்: இந்த வழக்கில் அண்மையில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், பொன்முடி, அவரது மனைவி ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ. 50 லட்சமும் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இதனால், அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ பதவியையும் பொன்முடி உடனடியாக இழந்தார். மேலும், பொன்முடி எம்.எல்.ஏ.வாக இருந்த திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையையும், அவர் குற்றவாளி என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பையும் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. மேலும் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சிக்கு ஜாமின் வழங்கியும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மீண்டும் எம்.எல்.ஏ பதவியை பெற்ற பொன்முடி: இதையடுத்து இழந்த தன் எம்.எல்.ஏ பதவியை மீண்டும் பெற்றுள்ளார் பொன்முடி. திருக்கோவிலூர் தொகுதி எம்.எல்.ஏவாக தொடர்கிறார் பொன்முடி. பொன்முடி எம்.எல்.ஏ ஆனதன் அடிப்படையில் அவரை மீண்டும் அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தனது பரிந்துரைக் கடிதத்தை நேற்று (மார்ச் 13) அனுப்பினார்.
அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க பரிந்துரை: நாளைக்குள் பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க கோரிக்கை விடுத்து உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகலை கடிதத்துடன் இணைத்து பொன்முடியை அமைச்சராகப் பதவியேற்க தனது பரிந்துரையை ஆளுநர் ரவிக்கு தெரிவித்திருந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, பொன்முடியின் அமைச்சர் பதவி பிரமாணத்திற்கு மார்ச் 14ஆம் தேதி (இன்று) நேரம் ஒதுக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ராஜ்பவனில் உள்ள பாரதியார் மண்டபத்தில் பதவியேற்பு நிகழ்வு நடைபெறும் என்றும், அதற்கான ஏற்பாடுகளை பொதுப்பணித்துறை மேற்கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியானது.
ஆளுநர் டெல்லி பயணம்: ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை (மார்ச் 14) டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே திட்டமிட்டபடி இன்று காலை 6.30 மணியளவில் ஆளுநர் ரவி டெல்லி செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இன்று பொன்முடி அமைச்சராக மீண்டும் பதவியேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
ஆளுநர் மார்ச் 16 ஆம் தேதி மீண்டும் டெல்லியில் இருந்து சென்னை திரும்புகிறார். ஆகவே அதற்குப் பிறகு பொன்முடி அமைச்சராக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே திமுக அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் ஆளுநர், பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்காமல் டெல்லிக்கு பறப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications