Vijay: மைனாரிட்டி ஆட்சி இதுக்கு முன்னாடி நடந்ததே இல்லையா? கேள்விக்கு உள்ளாகும் ஆளுநரின் நடவடிக்கை
சென்னை: தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க விஜய் போராடி வருகிறார். போதுமான எம்எல்ஏக்கள் இல்லை என்பதால், ஆளுநர் ஆட்சி அமைக்க விஜய்யை அழைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால், இதற்கு முன்னர் போதுமான மெஜாரிட்டி இல்லாமல் ஆட்சி அமைக்கப்பட்டு நடந்திருக்கிறது. அப்படி எனில் விஜய்க்கு மட்டும் ஏன் அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கேள்வி எழுந்திருக்கிறது.
மைனாரிட்டி ஆட்சிக்கு சிறந்த உதாரணம் பி. வி. நரசிம்ம ராவ் தலைமையிலான அரசுதான் (1991 - 1996). இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மிக முக்கியமான காலகட்டமாகும்.

நரசிம்ம ராவ் தலைமையிலான அரசு
1991 நாடாளுமன்றத் தேர்தலின் போது ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். அனுதாப அலை இருந்தபோதிலும், காங்கிரஸ் கட்சியால் பெரும்பான்மைக்குத் தேவையான 272 இடங்களைப் பெற முடியவில்லை. இக்கட்டான இந்தச் சூழலில், அனுபவம் வாய்ந்த பி. வி. நரசிம்ம ராவ் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனிப்பெரும்பான்மை இல்லாதபோதும், ராவ் அரசு தந்திரமான அரசியல் நகர்வுகள் மூலம் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது.
இடதுசாரிகள் ஆதரவு
தொடக்கத்தில் இடதுசாரிக் கட்சிகள் மற்றும் சில பிராந்தியக் கட்சிகள், பாரதிய ஜனதா கட்சி (BJP) ஆட்சிக்கு வருவதைத் தவிர்க்க, காங்கிரசுக்கு வெளியில் இருந்து மறைமுக ஆதரவு அளித்தன. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (JMM) போன்ற சிறிய கட்சிகளின் ஆதரவை ராவ் திரட்டினார். தனது ஆட்சிக்காலத்தில் பலமுறை நம்பிக்கையில்லா தீர்மானங்களை எதிர்கொண்ட போதிலும், எதிர்க்கட்சிகளுக்குள் இருந்த பிளவுகளைப் பயன்படுத்தி ராவ் ஒவ்வொரு முறையும் வெற்றி பெற்றார். இப்படியாக 5 ஆண்டுகளை இந்த ஆட்சி வெற்றிகரமாக முடிவு செய்தது.
வி.பி.சிங் அரசு
அடுத்து வி.பி.சிங் அரசும் இப்படித்தான் பெரும்பான்மை இல்லாமல் நடந்தது. அதாவது, 1989 பொதுத் தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.
காங்கிரஸ்: 197 இடங்கள் (இதுவே தனிப்பெரும் கட்சி, ஆனால் ஆட்சி அமைக்க ராஜீவ் காந்தி மறுத்துவிட்டார்).
ஜனதா தளம் (வி. பி. சிங்): 143 இடங்கள்.
பாஜக: 85 இடங்கள்.
இடதுசாரிகள்: 45 இடங்கள்.
வி. பி. சிங் எப்படி ஆட்சி அமைத்தார்?
வி. பி. சிங்கின் ஜனதா தளம் கட்சிக்கு வெறும் 143 இடங்கள் மட்டுமே இருந்தன. பெரும்பான்மைக்கு இன்னும் 129 இடங்கள் தேவைப்பட்டன. இதற்காக அவர் கையாண்ட முறைதான் தேசிய முன்னணி கூட்டணி. இதில் வினோதமான விஷயம் என்னவென்றால், பாஜக (வலதுசாரி) மற்றும் இடதுசாரிக் கட்சிகள் ஆகிய இரண்டும் வி. பி. சிங்கிற்கு ஆதரவு அளித்தன.
11 மாதங்களில் கவிழந்த அரசு
ஆனால், இந்த இரு துருவக் கட்சிகளும் ஒரே மேடையில் அமர விரும்பவில்லை. எனவே, அவர்கள் அமைச்சரவையில் சேராமல் வெளியில் இருந்து ஆதரவு வழங்கினர். இந்த முரண்பட்ட கட்சிகளின் ஆதரவுடன் வி. பி. சிங் நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபித்தார். ஆனால் 11 மாதங்கள் மட்டுமே இந்த ஆட்சி நீடித்தது.
அத்வானியின் ரத யாத்திரை பீகாரில் லாலு பிரசாத் யாதவால் தடுத்து நிறுத்தப்பட்டு, அத்வானி கைது செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக தனது ஆதரவை வாபஸ் பெற்றது. இதனால் 11 மாதங்களிலேயே வி. பி. சிங் அரசு கவிழ்ந்தது.
மன்மோகன் சிங் அரசு
இதற்கடுத்து மன்மோகன் சிங் அரசு (2004 - 2009) ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA-1) ஆட்சியில் காங்கிரஸிற்கு தனிப்பெரும்பான்மை இல்லை. இடதுசாரிக் கட்சிகளின் வெளியிலிருந்து வழங்கிய ஆதரவால் ஆட்சி நடந்தது.
அடல் பிஹாரி வாஜ்பாய் (1996): 1996-ல் வாஜ்பாய் பிரதமராகப் பதவியேற்றார். ஆனால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான ஆதரவு திரட்ட முடியாததால், வெறும் 13 நாட்களில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
வாஜ்பாய் அரசு (1999): மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, அதிமுக தனது ஆதரவை வாபஸ் பெற்றதால், நம்பிக்கை வாக்கெடுப்பில் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது.
எம்.ஜி.ஆர் மறைவிற்குப் பின் (1988): ஜானகி ராமச்சந்திரன் முதலமைச்சராகப் பொறுப்பேற்றபோது சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதில் பெரும் கலவரம் வெடித்தது. இறுதியில் அந்த அரசு கலைக்கப்பட்டது.
திமுக அரசு (2006 - 2011): 2006 சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்குத் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை (96 இடங்கள் மட்டுமே). காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளின் ஆதரவுடன் "மைனாரிட்டி திமுக அரசு" என்று விமர்சனங்களுக்கு இடையே 5 ஆண்டுகள் ஆட்சி நடத்தியது.
இப்படி இந்திய அரசியல் வரலாற்றில் மைனாரிட்டி ஆட்சி நடைபெற்று வந்திருக்கிறது. இதெல்லாம் இருந்தும், விஜய்க்கு ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்காதது பெரிய விமர்சனமாக எழுந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications