Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அம்பேத்கரை, அமித் ஷா விமர்சித்தபோது ஆளுநர் ரவி எங்கே போனார்? அமைச்சர் கோவி.செழியன் சரமாரி கேள்வி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அம்பேத்கர் குறித்து பெருமையாக பேசும் ஆளுநர் ஆர்.என்.ரவி, அதே அம்பேத்கரை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சிக்கும்போது எங்கே போனார் என அமைச்சர் கோவி செழியன் கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று மாலை நடைபெற்ற அம்பேத்கர் ஜெயந்தி விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, சமூக நீதி குறித்து பேசும் தமிழ்நாட்டில் செருப்பு போட்டுச் செல்வதற்காகவும், இருசக்கர வாகனத்தில் சென்றதற்காகவும் பட்டியலின மக்கள் தாக்கப்படுவதாக தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு எதிரான குற்றச் செயல்களும், தலித் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Govi Chezhian Questions Governor Ravi s Silence on Amit Shah s Criticism of Ambedkar

மேலும், தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான குற்றச் செயல்கள் 50 சதவீதம் உயர்ந்ததாகவும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் தண்டனை வழங்கப்படும் விகிதம், தேசிய அளவில் இருப்பதை விட குறைவாக இருப்பதாகவும் ஆளுநர் ரவி குற்றம் சாட்டினார். ஆளுநர் ரவியின் கூற்றுக்கு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் கடுமையாக எதிர்வினை ஆற்றியுள்ளார்.

அமைச்சர் கோவி செழியன் பதிலடி

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்படும் மசோதாக்களை எல்லாம் பல மாதங்களாகக் கிடப்பில் போட்ட ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு இந்தியா முழுவதும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்திய வரலாற்றிலேயே முதன் முறையாக மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்க குடியரசுத் தலைவருக்கும் 3 மாதம் காலக்கெடு நிர்ணயித்து உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம்.

இந்த வடுக்களையெல்லாம் தாங்கிக் கொள்ள முடியாமல், வழக்குப் போட்டு வென்ற தமிழ்நாடு அரசுக்கு எதிராக வழக்கம் போல ஓலமிட்டிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. அம்பேத்கரின் பிறந்தநாள் விழாவில் பேசிய ஆளுநர் ரவி, அபத்தமான கருத்துகளை வெளியிட்டிருக்கிறார்.

பச்சைப் பொய் சொல்கிறார் ஆளுநர் - கோவி.செழியன்

சமூக நீதி குறித்துப் பேசும் இந்த மாநிலத்தில் செருப்பு போட்டுச் செல்வதற்காகவும், இரு சக்கர வாகனத்திற்காகவும் தலித்துகள் தாக்கப்படுகின்றனர்' என பச்சை பொய்யை சொல்லியிருக்கிறார் ஆளுநர். 'பட்டியல் சாதியினருக்கு எதிரான குற்றங்களில் பீகார் இரண்டாவது இடத்தில் இருக்கிறது' எனத் தேசியப் பட்டியல் சாதியினருக்கான ஆணையத்தின் (NCSC) தலைவர் விஜய் சாம்ப்லா 2023-இல் சொன்னார்.

ஆளுநர் அவர்களே. உங்கள் சொந்த மாநிலத்தில் இப்படி அநீதி நடந்து கொண்டிருக்கும் போது தமிழ்நாட்டைப் பற்றிப் பேச உங்களுக்குத் தகுதி இருக்கிறதா? பீகாரில் பா.ஜ.க தயவில்தான் ஆட்சி நடக்கிறது. அதைக் கண்டித்துப் பேச முடியுமா உங்களால்?

டபுள் ரோல் எடுபடாது

அம்பேத்கரைப் பற்றியெல்லாம் உருகிப் பேசியிருக்கிறீர்கள். "அனைவரும் ஒன்று. அனைவரும் சமம் என்பதைத்தான் சனாதன தர்மம் கூறுகிறது" எனச் சனாதனத்திற்குப் பிராண்ட் அம்பாசிடராகப் பேசிக் கொண்டிருக்கும் நீங்கள், சனாதனத்தை எதிர்த்தப் புரட்சியாளர் அம்பேத்கரைப் புகழ்வது பொருத்தமாகவா இருக்கிறது? சனாதனத்தைத் தூக்கிப் பிடித்துக் கொண்டே பட்டியலின மக்களைப் பற்றிக் கவலைப்படுகிறீர்களே! உங்களின் 'டபுள் ரோல்' நடிப்பு தமிழ்நாட்டில் எடுபடாது.

நாடு முழுவதும் பட்டியல் மற்றும் பழங்குடியினத்தவர் மீதான வன்கொடுமைகளில் 97.7 விழுக்காடு வழக்குகள் உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 13 மாநிலங்களில்தான் பதிவாகியிருக்கின்றன என ஒன்றிய அரசின் அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. 2024-ஆம் ஆண்டில் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினத்தவர் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் பதிவான வழக்குகள் குறித்த ஒன்றிய அரசு வெளியிட்ட அறிக்கையின்படி, நாடு முழுவதும் பட்டியலின மக்கள் மீதான தாக்குதல் குறித்து 51,656 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில், 12,287 வழக்குகள் உத்தரப் பிரதேசத்தில் பதிவாகியிருக்கிறது. இது, மொத்தம் பதிவானவற்றில் 23.78 விழுக்காடாகும்.

பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்கள்

உத்தரப் பிரதேசத்திற்கு அடுத்த இடத்தில் ராஜஸ்தானில் 8,651 வழக்குகளும் - மத்தியப் பிரதேசத்தில் 7,732 வழக்குகளும் பீகாரில் 1,799 வழக்குகளும் பதிவாகியுள்ளன. அதற்கு அடுத்த இடங்களில் ஒடிசாவில் 5.93 விழுக்காடும் மகாராஷ்டிராவில் 5.24 விழுக்காடும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த 6 மாநிலங்களில் மட்டும் 81 விழுக்காடு வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த ஆறு மாநிலங்களிலும் பா.ஜ.க. ஆட்சியில் உள்ளது. தமிழ்நாட்டில் 3 விழுக்காடு வழக்குகளே பதிவானது.

நாட்டிலேயே பட்டியலின மக்களுக்கு எதிராக அதிகளவில் வன்முறைகளும் கொடுமைகளும் நடைபெறுவது பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில்தான் என்பதை ஒன்றிய அரசின் தரவுகளே சொல்கின்றன. சாதிக் கொடுமைகளுக்கு அடிப்படையான மனுநீதியை உயர்த்திப் பிடிக்கும் சனாதனி ஆளுநர் ஆர்.என்.ரவி, சாதிக்கொடுமைகளுக்கு எதிராகப் போராடும் சமூகநீதி மாநிலத்தில் நீலிக்கண்ணீர் சிந்துகிறார்.

அமித் ஷா சொன்னாரே

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஜனநாயக முறையில் செயலாற்றி வரும் மாநில அரசுக்குக் குடைச்சலைக் கொடுக்கிறார். உச்சநீதிமன்றம் ஓங்கிக் குட்டிய பிறகும் அந்த அவமானத்தைத் துடைக்க அவதூறுகளை அள்ளி வீசுகிறார். ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுவதைப் போல் பட்டியலின மக்கள் மீது கரிசனத்தைக் கொட்டுகிறார்.

உங்களை ஆளுநராக நியமித்த மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கரை பற்றிச் சொன்னது உங்களுக்கு நினைவில் இருக்கிறதா ஆளுநரே "இந்தக் காலத்தில் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என அவரின் பெயரைக் கோஷமிடுவது பேஷனாகிவிட்டது. இத்தனை முறை அம்பேத்கர் பெயரைக் கூறியதற்குப் பகவானின் பெயரைக் கூறியிருந்தால் அவர்களுக்குச் சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்" என அமித்ஷா நாடாளுமன்றத்தில் சொன்ன போது நாடு முழுவதும் கொந்தளிப்பு எழுந்தது.

தகுதியே இல்லை

அம்பேத்கர் தலித் தலைவர் அல்ல, அவர் பாரதத் தாயின் மகன் என இன்றைக்குச் சொல்லும் ஆளுநர் அமித்ஷா சொன்ன போது ராஜ் பவனின் தர்பார் மண்டபத்தில் ஒரு கண்டன கூட்டத்தை ஏன் நடத்தவில்லை? அமித்ஷா சொல்வது போல உங்களுக்கும் அம்பேத்கர் பெயரைக் கோஷமிடுவது பேஷனாகிவிட்டதா? ஆரியம் பேசும் நீங்கள் அம்பேத்கரை போற்றி பாடுகிறீர்கள். அம்பேத்கரை பற்றிப் பேசவோ திராவிடத்தைத் தூற்றவோ உங்களுக்கு எந்தத் தகுதியும் கிடையாது." எனக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை பல மாதங்களாக ஆளுநர் ஆர். என். ரவி கிடப்பில் வைத்திருந்ததற்கு எதிராக, உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை சமீபத்தில் வழங்கியது. குடியரசு தலைவர் மசோதாக்களுக்கு நடவடிக்கை எடுக்க 3 மாத காலக்கெடு நிர்ணயித்தும் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு மாநிலத்தின் உரிமையை நிலைநாட்டும் வகையில் அமைந்துள்ளதாக நாடு முழுவதும் பாராட்டுக் குரல்கள் எழுந்தன. இந்தச் சூழலில் தான் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் தமிழ்நாட்டை விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார் ஆளுநர் ரவி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+