GST வரியில் எதிர்பார்க்காத மாற்றம்.. சிகரெட்டுகள் பல மடங்கு உயரப்போகுது.. அடியோடு மாறும் விலை
சென்னை: மத்திய அரசு, புதிய சரக்கு மற்றும் சேவை வரி (GST) விகிதங்களாக 5% மற்றும் 18% ஆகியவற்றை அமல்படுத்த பரிந்துரைத்துள்ளது. இதுமட்டுமல்லாமல், சீரமைக்கப்பட்ட இந்த மறைமுக வரி விதிப்பில் சிகரெட்டுகள் மற்றும் பிற புகையிலை பொருட்களுக்கு 40% வரி விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
தற்போது 12% வரி விதிக்கப்படும் பொருட்களில் 99% பொருட்கள் 5% வரி அடுப்பிற்கு மாற்றப்படவுள்ளன. அதேபோல், அதிகபட்சமாக 28% வரி விதிக்கப்படும் பொருட்களில் சுமார் 90% பொருட்கள் 18% வரி அடுக்குக்கு மாற்றப்படவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

GST சீர்திருத்தம்
இந்த ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள், பொருளாதாரத்தில் நுகர்வை கணிசமாக அதிகரிக்கும் என இந்தியா எதிர்பார்க்கிறது. வரி விகித சீரமைப்பு காரணமாக ஏற்படும் வருவாய் இழப்பை இது ஈடுசெய்யும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் மறைமுக வரி விதிப்பில் இரண்டு விகிதங்களை மட்டுமே இறுதி செய்ய, தற்போதுள்ள 12% மற்றும் 28% ஜிஎஸ்டி அடுக்குகளை ரத்து செய்ய மத்திய அரசு முன்மொழிந்துள்ளது.
சிகரெட்டுகள் போன்ற புகையிலை பொருட்களுக்கு 40% ஜிஎஸ்டி விதிக்கப்படுவதுடன், தீங்கு விளைவிக்கும் பொருட்கள் மற்றும் ஆடம்பர பொருட்களுக்கும் 40% வரி விதிக்கப்படும். அதேவேளையில், அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களின் ஜிஎஸ்டி விகிதம் 5% ஆக நிர்ணயிக்கப்பட உள்ளது.
சிகரெட்டுகள் போன்ற புகையிலை பொருட்களுக்கு 40% GST
தற்போது சிகரெட்டுகள் போன்ற புகையிலை பொருட்களுக்கு 28% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இதனால் இப்போது சிகரெட்டுகள் போன்ற புகையிலை பொருட்களுக்கு 40% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டால் சிகரெட்டுகள் விலை 12% கூடும். அதாவது கிட்டத்தட்ட 15 ரூபாய் சிகரெட் 18 ரூபாய் வரை விற்பனை ஆகும் வாய்ப்புகள் உள்ளன.
அதே சமயம் , பெட்ரோலியப் பொருட்கள் புதிய ஜிஎஸ்டி ஆட்சி முறைக்கு வெளியே தொடர்ந்து இருக்கும். ஒட்டுமொத்த வரி விதிப்புத் தாக்கம் தற்போதைய 88% அளவிலேயே இருக்கும் என அரசு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தன்று, மத்திய அரசு 'எளிமையான வரி' முறையை நோக்கி நகர்ந்து வருவதாக நிதி அமைச்சகம் அறிவித்தது. இதன் ஒரு பகுதியாக, 'இரண்டு அடுக்குகள்' கொண்ட மறைமுக வரி விதிப்பை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
இரண்டு ஜிஎஸ்டி அடுக்கு
இந்த சீர்திருத்தங்கள், 'நிலையான' மற்றும் 'திறன்சார்' என பெயரிடப்பட்ட இரண்டு ஜிஎஸ்டி அடுக்குகளையும், சில குறிப்பிட்ட பொருட்களுக்கான சிறப்பு வரி விகிதத்தையும் உருவாக்கும் நோக்கில் உள்ளன. இந்த பரிந்துரைகள் ஏற்கனவே ஜிஎஸ்டி கவுன்சிலால் நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவுக்கு (GoM) அனுப்பப்பட்டுள்ளன. அடுத்த கவுன்சில் கூட்டத்தில், சீரமைக்கப்பட்ட இந்த வரி விதிப்பு முறையை செயல்படுத்துவது குறித்து விவாதித்து விரைவில் அமல்படுத்தப்படும் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள 12% மற்றும் 28% வரி அடுக்குகளை நீக்கிவிட்டு, 5% மற்றும் 18% அடுக்குகளை மட்டுமே வைத்திருக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தினசரி பயன்பாட்டுப் பொருட்கள், ஆடம்பரப் பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்களுக்கான ஜிஎஸ்டி கட்டமைப்பை மத்திய அரசு திருத்த வாய்ப்புள்ளது. வரி அமைப்பைச் சீரமைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது என்று அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவே இந்த ஜிஎஸ்டி விகிதங்கள் திருத்தப்படலாம். வெள்ளிக்கிழமை சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி, "இந்த தீபாவளியை, இரட்டை தீபாவளியாக மாற்றுவேன்" என்று அறிவித்தார்.












Click it and Unblock the Notifications