ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்றால் தமிழகத்திற்கு தான் நஷ்டம் -குருமூர்த்தி
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்றால் தமிழகத்திற்கு தான் நஷ்டம் என துக்ளக் இதழின் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அவர் நிச்சயம் ஆட்சியை பிடிப்பார் என்றும் தமிழகத்தில் தற்போது மக்களை ஈர்க்கக் கூடிய தலைவர்கள் என்று யாருமில்லை எனக் குறிப்பிட்டார்.
மேலும், சசிகலா தரப்பிற்கு தமது தரப்பில் இருந்து எந்த உதவிகளும் செய்யப்படவில்லை என்றும் கிசு கிசு செய்திகளுக்கு தாம் பொறுப்பல்ல எனவும் குருமூர்த்தி தெரிவித்துள்ளார். 2017-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது வரை டிடிவி தினகரனை தாம் சந்தித்து பேசியதில்லை என விளக்கம் அளித்தார்.
திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளும் தேர்தல் வியூக வகுப்பாளர்களை சம்பளம் கொடுத்து பணியமர்த்தியிருப்பதை பார்த்தாலே அங்கு சரியான தலைமை இல்லாதது புரிய வரும் எனக் கூறினார். எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் சரி அது குறிப்பிட்ட ஒரு குடும்பத்தின் கீழ் செல்வதை ஏற்க முடியாது எனவும் தெரிவித்தார்.
இதனிடையே தமிழகத்திற்கு நிறைய செய்ய வேண்டிய கடமை ரஜினிக்கு உள்ளதாகவும் அவர் மீது மக்கள் பெரியளவில் எதிர்பார்ப்பு வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த 60 ஆண்டுகளாக தேசிய நீரோட்டத்தில் இருந்து தமிழகம் விலகியிருப்பதாகவும் ரஜினி வந்தால் இந்த நிலைமை மாறக்கூடும் எனவும் தெரிவித்தார்.
தமது நம்பிக்கை ஒரு போதும் பொய்யானதில்லை என்று கூறிய குருமூர்த்தி ரஜினிகாந்த் முடிவு குறித்து தாம் கூறுவது சரியாக இருக்காது எனத் தெரிவித்தார்.