சட்டசபைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம்.. ஸ்டாலின் வழக்கில் நாளை சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு!
சென்னை: தமிழக சட்டசபைக்குள் குட்கா கொண்டு சென்றதற்காக உரிமைக் குழு அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ-க்கள் தொடர்ந்த வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதைப்பொருட்கள் கடைகளில் காவல்துறை உதவியோடு விற்பனை செய்வதை அரசின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காகவே எதிர்க்கட்சி தலைவரான திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏ.-க்கள் சட்டப்பேரவைக்குள் குட்கா பாக்கெட்டுகளை கொண்டு சென்றனர்.

இதுதொடர்பாக சட்டபேரவை உரிமை குழு எடுத்த நடவடிக்கையில் அனுப்பபட்ட உரிமை மீறல் குழு நோட்டீஸை ரத்து செய்யக் கோரி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏ-க்களும் 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 7ல் வழக்கு தொடர்ந்தனர்
வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.துரைசாமி, திமுக எம்எல்ஏ-க்களுக்கு அனுப்பப்பட்ட உரிமை குழு நோட்டீஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த தடையை நீக்க கோரி சட்டபேரவை செயலாளர் தரப்பில் தாக்கல் செய்யபட்ட மனுவும் நிலுவையில் உள்ளது. இந்த வழக்குகள் பின்னர் இரு நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு மாற்றப்பட்டது.
2017ஆம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்குகளில் தற்போதைய தலைமை நீதிபதி ஏ.ப்பி.சாஹி , நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் ஆகஸ்ட் 12, 13, 14 ஆகிய நாட்களில் இறுதி விசாரணை நடைபெற்றது.
திமுக எம்.எல்.ஏ.-க்களாக இருந்த ஜெ.அன்பழகன், கே.பி.பி.சாமி ஆகியோர் மரணமடைந்ததாகவும், திமுகவிலிருந்து நீக்கப்பட்ட கு.க.செல்வத்திற்காக நாங்கள் ஆஜராகவில்லை என்றும் திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.பின்னர் திமுக தரப்பு வாதத்தையே தன் தரப்பு வாதமாகவும் ஏற்றுக்கொள்ளும்படி கு.க.செல்வம் தரப்பில் ஒரு கூடுதல் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்து ஆகஸ்ட் 14ஆம் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.இந்த வழக்குகளில் தலைமை நீதிபதி ஏ.ப்பி.சாஹி அமர்வு நாளை தீர்ப்பளிக்க உள்ளது.












Click it and Unblock the Notifications