ஸ்டெர்லைட் ஆலையை திறங்க... உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு ஹெச்.ராஜா வரவேற்பு
Recommended Video
சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வரவேற்பு தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த விநாயகர் சதுர்த்தி விழாவின் போது, ஹெச்.ராஜா நீதிமன்றத்தை அவமரியாதையுடன் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. பின்னர் அந்த வழக்கில் ஜாமீன் பெற்றார்.
இந்தநிலையில், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்று தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில், தற்போது, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு ஹெச்.ராஜா வரவேற்பு தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றம் உத்தரவு
தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், தேசிய பசுமை தீப்பாயம் விதித்த விதிமுறைகள்படி, ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதல்வர் பேச்சு
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு இறுதி தீர்ப்பு அல்ல. தீர்ப்பின் முழு விவரம் அரசுக்கு கிடைக்கவில்லை; கிடைத்ததும் அரசு தக்க நடவடிக்கை எடுக்கும் என்று சட்டசபையில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பதில்
மேலும், பசுமைத் தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்திருப்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அதற்கு, ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் அனுமதிக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
சட்டசபை ஒத்திவைப்பு
இதற்கிடையே, ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்காமல் இருக்க தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து சிறப்பு சட்டம் இயற்ற பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் தூத்துக்குடி மக்கள் வலியுறுத்தி உள்ள நிலையில், சட்டசபையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் தனபால்.