சென்னையில் ஐடி ஊழியரை கடித்து குதறிய ஹாரிஸ் ஜெயராஜின் வளர்ப்பு நாய்.. பாய்ந்தது வழக்கு
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் ஹாரிஸ் ஜெயராஜ் வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் நாய் ஐடி ஊழியரை கடித்து குதறியது. இதில் ஐடி ஊழியர் காயமடைந்துள்ள நிலையில் சென்னை வளசரவாக்கம் போலீசார் சம்பவம் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ் இருக்கிறார். தமிழகம் முழுவதும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வருகிறார். இவர் செல்லப்பிராணியாக நாய் வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் தான் ஹாரிஸ் ஜெயராஜ் வளர்க்கும் நாய் ஐடி ஊழியர் ஒருவரை கடித்துள்ளது. அதாவது ஹாரிஸ் ஜெயராஜ் வீட்டின் அருகே காமராஜர் சாலை செல்கிறது. இந்த சாலையில் 26 வயது நிரம்பிய ஐடி ஊழியரான ஆதித்யா என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.
ஆதித்யா தான் வளர்க்கும் நாயை உடன் அழைத்து சென்று கொண்டிருந்தார். ஹாரிஸ் ஜெயராஜ் வீட்டின் அருகே அவர் சென்றார். அப்போது ஹாரிஸ் ஜெயராஜ் வீட்டில் வளர்க்கப்படும் நாயை, காவலாளி கவனித்து கொண்டிருந்தார். திடீரென்று காவலாளியை தாண்டி எகிறி குதித்த ஹாரிஸ் ஜெயராஜ் வளர்க்கும் நாய் வெளியே ஓடிவந்து ஐடி ஊழியர் ஆதித்யா மீது பாய்ந்து தாக்கியது. இதில் அவரது கை, கால்களில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து காவலாளி மற்றும் அங்கிருந்தவர்கள் நாயை விரட்டி ஆதித்யாவை மீட்டனர். இருப்பினும் அவரது கைகளில் காயம் ஏற்பட்டது. உடனடியாக தனியார் மரு்ததுவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. அதோடு மருத்துவமனை சார்பில் வளசரவாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கவனக்குறைவாக செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications