திமுகவை திடுக்கிட வைத்த த.வா..க வேல்முருகன்! திடீர் கொந்தளிப்பு ஏன்? என்ன பின்னணி?
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் வேல்முருகன் திமுக அரசு மீது பரபரப்பு புகார்.
சென்னை: திமுகவுக்கும் அதிமுகவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை எனக் கூறி பரபரப்பை பற்ற வைத்திருக்கிறார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்.
மேலும், அதோடு மட்டும் விடாமல் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின் பகிரங்கமாக கூறியிருக்கிறார்.
இதன் மூலம் திமுக கூட்டணியிலிருந்து வெளியேறுவதற்கு வேல்முருகன் முடிவெடுத்துவிட்டாரா என்ற விவாதங்கள் எழத் தொடங்கியுள்ளன.

200வது நாள்
பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் நடத்தி வரும் தொடர் போராட்டம் இன்று 200வது நாளை எட்டியுள்ளது. இதில் கலந்துகொண்டு பேசிய வேல்முருகன், தாம் இனி எதற்கும் துணிந்துவிட்டேன் என்பதை கூட்டணிக் கட்சியான திமுகவுக்கு உணர்த்தும் வகையில் அனல் கக்கியுள்ளார். திமுகவுக்கும் அதிமுகவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை எனக் கூறியதோடு மட்டுமின்றி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின் பகிரங்கமாக கூறியிருக்கிறார்.

திமுக கூட்டணி
கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பிருந்தே திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் அண்மைக் காலமாக அமைச்சர்கள் மீதும் அதிகாரிகள் மீது கடும் அதிருப்தியில் இருந்து வந்திருக்கிறார். குறிப்பாக என்.எல்.சி.க்கு விவசாயிகளிடம் இருந்து நிலம் கையகப்படுத்தி கொடுக்கும் விவகாரத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் காட்டி வரும் அக்கறை வேல்முருகனுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தவறான தகவல்
கூட்டணியில் இருப்பதற்காக இதனை தன்னால் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது என தனக்கு நெருக்கமானவர்களிடம் ஆதங்கத்தை கொட்டியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீதும் வேல்முருகனுக்கு கடும் அதிருப்தி இருந்து வந்திருக்கிறது. அதனை வெளிக்காட்டும் விதமாக தான் இன்று பரந்தூரில் பேசிய வேல்முருகன், முதலமைச்சருக்கு சில அதிகாரிகள் தவறான தகவல்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் எனக் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.

ஈரோடு கிழக்கு
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் விவகாரத்திலும் சம்பிரதாயத்துக்கு திமுக தரப்பிலிருந்து வேல்முருகனுக்கு ஒரு முறை மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால் அதிமுக தரப்பிலோ புரட்சி பாரதம் பூவை ஜெகன் மூர்த்தி உட்பட கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிறிய கட்சி பெரிய கட்சி என்ற வேறுபாடு இல்லாமல் அனைத்துக் கட்சிகளுக்கும் உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளது. ஈவிகேஎஸ் இளங்கோவன் மட்டும் வேல்முருகனை நேரில் சந்தித்து ஆதரவு கோர நேரம் கேட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

நெருங்கிய வட்டம்
இதனிடையே திமுகவுக்கும் எதிராக வேல்முருகன் கோபம் கொப்பளிக்க பேசியதன் பின்னணி பற்றி அறிவதற்காக அவருக்கு நெருக்கமான நபரிடம் நாம் பேசினோம், ''எத்தனை நாளைக்கு சார் அவங்க சொல்றதை கேட்டுக்கிட்டே இருப்பது, அவர்களை கேட்காமல் எதுவும் செய்யக்கூடாதுன்னா எப்படி'' என்று மட்டும் கூறினார். மேற்கொண்டு ஈரோடு இடைத்தேர்தலுக்கும் வேல்முருகனின் கோபத்துக்கும் துளியும் தொடர்பில்லை எனக் கூறியவர், வேல்முருகனின் கோபத்துக்கு வேறு ஏதோ பெரிய காரணம் இருப்பதை மட்டும் தற்போதைய சூழலில் கூற மறுத்துவிட்டார்.












Click it and Unblock the Notifications