Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாங்குநேரி கொடூரம்.. பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் மீது கொட்டப்படும் வன்மம்! விஷமும் மருந்தும் ஒன்னா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாங்குநேரியில் 12 ஆம் வகுப்பு தலித் மாணவன் சின்னதுரை கொடூரமாக வெட்டப்பட்ட சம்பவத்துக்கு காரணம் என்று சொல்லி இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் மீது விமர்சனங்கள் ஏழுந்துள்ள நிலையில், உண்மையில் இதற்கு யார் காரணம் என்று பார்ப்போம்.

தமிழ் சினிமாவில் சின்ன கவுண்டர், தேவர் மகன், எஜமான், நாட்டாமை, சூர்யவம்சம், ஜெண்டில் மேன், அந்நியன் ஆண்ட சாதி பெருமை பேசும், பட்டியலின மக்களை வில்லன்களாக, மோசமானவர்களாக சித்தரிக்கும் திரைப்படங்கள் ஏராளமாக வந்து உள்ளன. கலாச்சாரம், மண் பெருமை, ஊர் பெருமை, கிராமபுற படங்கள் என்று சொல்லிக்கொண்டே ஒரு தலைமுறை முழுவதும் இதுபோன்ற எண்ணிலடங்கா சாதி வெறி படங்கள் தமிழ் சினிமாவில் வந்து உள்ளன.

Hate propaganda against Pa.Ranjith and Mari Selvaraj in Nanguneri caste issue

தமிழ்நாட்டில் சாதி கட்டமைப்பு கொஞ்சம் கொஞ்சமாக தகர்ந்து வந்த சமயத்தில் இதுபோன்ற படங்கள் 90கள், 2000ங்களில் வெளியாகி மீண்டும் சாதி வெறியை ஊட்டின. தற்போதும் குட்டிப்புலி, கொம்பன், மருது, முத்துராமலிங்கம், சுந்தரபாண்டியன், திரௌபதி, ருத்ரதாண்டவம் என பல படங்கள் ஆண்ட சாத பெருமை பேசும் வகையில் வருகின்றன.

நாங்குநேரி, வேங்கைவயல் போன்ற சாதிய கொடூரங்கள் அரங்கேறும் சமயங்களில் இப்படி சாதி வெறி பேசும் படங்களை எடுத்த இயக்குநர்களை பற்றி பலர் பேசுவது இல்லை. மாறாக சாதிக்கு எதிரான படங்களை எடுத்த இயக்குநர்கள் மீதே விமர்சனங்களை அடுக்குகின்றனர்.

குறிப்பாக 2009க்கு பிறகு பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், சுசீந்திரன், வெற்றிமாறன் தொடங்கி தற்போது கவுதமராஜ் வரை சாதிய கொடுமைகளுக்கு எதிரான படங்களை இயக்கி வருகின்றனர். சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடி குழு, ஜீவா, மாவீரன் கிட்டு, பா.ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை, மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வெற்றிமாறன் இயக்கிய அசுரன், ஞானவேல் இயக்கிய ஜெய்பீம் போன்ற திரைப்படங்கள் பட்டியலின மக்கள் அனுபவிக்கும் சாதிய வலிகளையும், அவர்களின் வாழ்வியலையும் பட்டவர்த்தமாக எடுத்துக் காட்டியவை.

சமீபத்தில் ராட்சசி பட இயக்குநர் கவுதமராஜ் இயக்கத்தில் வெளிவந்த கழுவேத்தி மூர்க்கன், தீபக் இயக்கத்தில் வெளிவந்த விட்னஸ், பிரான்கிளின் ஜேகப் இயக்கத்தில் வந்த ரைட்டர், மடோன் அஸ்வின் இயக்கிய மண்டேலா, அருண் ராஜா காமராஜின் நெஞ்சுக்கு நீதி, போஸ் வெங்கட் இயக்கிய கன்னி மாடம், பாவல் நவநீதன் இயக்கிய வி1 மர்டர் கேஸ் உள்ளிட்ட படங்கள் சாதிய கொடுமைகள், தீண்டாமை, மலக்குழி மரணங்கள், ஆணவக் கொலைகளுக்கு எதிராக பேசுகின்றன.

இத்தகைய திரைப்படங்களின் வருகையால் காலம் காலமாக ஒடுக்கப்பட்டு வந்த மக்களின் வலி திரைமொழியாக வெளியில் தெரிகிறது. பரியேறும் பெருமாள் போன்ற திரைப்படங்கள் வெளியாகி வந்து சாதி பற்றுடன் இருக்கும் பலரது குற்ற உணர்வை தட்டி எழுப்பியது.
சாதியையும், தீண்டாமையையும், பெண் அடிமைத் தனத்தையும் போற்றும் வகையிலும், சாதியவாதிகளை ஹீரோக்களாக சித்தரித்தும் எடுக்கப்பட்ட படங்கள் குறைந்து, சாதி வெறியர்களை வில்லன்களாக காட்டி, சாதி என்பதை இழி செயலாக காட்டும் திரைப்படங்கள் இப்போதுதான் வரத் தொடங்கியுள்ளன.

இதன் மூலமாக அடுத்த தலைமுறை சாதி வெறியை தூண்டுபவனை வில்லனாகவும், சாதியை பாவச் செயலாகவும் பார்க்கும் சூழல் உருவாகும். இதுதான் சாதியை வைத்து பிழைப்பு நடத்துபவர்களுக்கு நடக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் சாதியை போற்றி எடுக்கும் படங்களையும், சாதிக்கு எதிரான படங்களையும் ஒரே தட்டி வைத்து விமர்சிக்க தொடங்கி உள்ளார்கள்.

இப்படி விமர்சிப்பவர்களில் சிலர் மட்டுமே புரிதல் இன்றி பேசுகிறார்கள். பெரும்பாலானவர்கள் சுயசாதி பெருமை பேசுபவர்களாகவும், இயக்குநரின் சாதி பின்புலத்தை அடிப்படையாக கொண்டு அவர்களின் வளர்ச்சியை ஏற்க முடியாமல் வன்மத்தை கொட்டுபவர்களாகவுமே உள்ளனர். மேலே நாம் பட்டியலிட்ட படங்கள் அனைத்தையும் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் மட்டும் இயக்கிவிடவில்லை.

பல்வேறு சமூகங்களை சேர்ந்தவர்கள் சாதிக்கு எதிரான படங்களை இயக்கியுள்ளார்கள். ஆனால், இங்கு விமர்சனம் வைக்கப்படுவது பா.ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் மீது மட்டும்தான். இந்த விமர்சனத்துக்கும் அவர்கள் துளி கூட தகுதியானவர்கள் இல்லை. ஏனென்றால் அவர்கள் இயக்கிய படங்கள் அனைத்தும் சாதியை போற்றி எடுக்கப்பட்டது கிடையாது. சாதியை தவறாகவே அவை காட்டியுள்ளன.

அதை பொறுக்க முடியாமல்தான் மாமன்னன் படத்தின் வில்லன் ரத்னவேலுவின் கொடூரமான குணத்தை அறிந்தும் அவனை ஹீரோவாக ஏற்று பகத் பாசிலுக்கு பயர் விட்டு கடைசியில் பல்பு வாங்கினார்கள். சாதியை போற்றிய படங்களையும், சாதி எதிர்ப்பு படங்களையும் சாதிய படங்கள் என்று ஒரே தட்டில் வைத்து விமர்சிப்பது என்பது விஷத்தையும், மருந்தையும் ஒன்றாக பார்ப்பதை போன்றதாகும்.

நோய் பரவினால் மருந்து கொடுத்துதான் ஆக வேண்டும். மருந்தை கொடுத்து நோயை நியாபகப்படுத்தாதே என்பது சரியான வாதம் இல்லை. தலைமுறை தலைமுறையாக சாதி என்ற நோயால் பாதிக்கப்பட்ட சமூகத்தை இந்த இயக்குநர்கள் மருந்தை போன்ற தங்களின் திரைப்படங்களின் மூலம் குணப்படுத்தி வருகிறார்கள்.

கடந்த பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட சாதி, மதத்தினர் வில்லன்களாகவும், குறிப்பிட்ட சாதி, மதத்தினர் ஹீரோக்களாகவும் காட்டப்பட்டு வந்த நிலையில், மாமன்னன் படத்தில் வரும் பாடல் வரிகளான, "எல்லாம் மாறும்" என்பதை போல், எளிய, உழைக்கும், ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை சமூக மக்களுக்கான படங்களை இந்த இயக்குநர்கள் இயக்கி தங்கள் சமூக பொறுப்பை நிறைவேற்றி வருகிறார்கள்.

இதனை ஏற்க முடியாமல் ஒருபக்கம் சாதி ஆதரவாளர்கள் குரல் கொடுத்தாலும், மறுபக்கம் அவர்களின் பிள்ளைகளே, சாதிக்கு எதிரான மனநிலைக்கு மாறிக்கொண்டு வருக்கிறார்கள். சினிமாவை மட்டுமே நம்பிக்கொண்டு இருக்காமல், நாங்குநேரி போன்ற கொடூரங்கள் அரங்கேறாமல் இருக்க பள்ளிகளின் மூலமாகவும் சமூக நீதி குறித்து மாணவர்கள் மத்தியில் அரசு பேச வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+