2 கேஸ் கனெக்ஷன் இருந்தால் கேன்சல்.. சிலிண்டர் புக் செய்தாலும் 25 நாள்.. 2 மத்திய அரசு புதிய ரூல்ஸ்
சென்னை: கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் மத்திய அரசு புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.. "ஒரு வீட்டுக்கு ஒரு கனெக்ஷன்" என்ற திட்டத்தை அரசு தற்போது தீவிரப்படுத்தியுள்ளது.. இதனால் ஒரே வீட்டில் சிலிண்டர் மற்றும் குழாய் வழி கேஸ் (PNG) என இரண்டையும் வைத்திருப்பவர்கள் இனி சிக்கலை சந்திக்கக்கூடும்.. இது தொடர்பான புதிய விதிமுறைகள் வரும் ஜூன் 30-க்குள் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய விதிப்படி, உங்கள் வீட்டில் ஏற்கனவே குழாய் மூலம் கேஸ் (PNG) இணைப்பு இருந்தால், நீங்கள் இனி கேஸ் சிலிண்டரை (LPG) வைத்திருக்க முடியாது.. இது விதிமுறைக்கு எதிரானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு புதிய ரூல்ஸ் - பழைய சிலிண்டர்
குழாய் வழி கேஸ் வைத்திருப்பவர்கள் தங்களின் சிலிண்டர் இணைப்பைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும்.. அப்படி ஒப்படைக்காதவர்களுக்கு இனி புதிய சிலிண்டர் வழங்கப்படாது.. பழைய சிலிண்டரையும் இனி நிரப்ப முடியாது..
சிலிண்டர்களை தேவையில்லாமல் பதுக்குவதைத் தடுக்கவும், கள்ளச்சந்தை விற்பனையை கட்டுப்படுத்தவும் புதிய காத்திருப்பு காலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.. இதன்படி நகரங்களில் இருப்பவர்கள் ஒரு சிலிண்டர் வாங்கினால், அடுத்த 25 நாட்கள் வரை அடுத்த சிலிண்டரை புக் செய்ய முடியாது.
இதேபோல் கிராமங்களில் இருப்பவர்கள் ஒரு சிலிண்டர் வாங்கினால், அடுத்த 45 நாட்கள் வரை அடுத்த சிலிண்டரை புக் செய்ய முடியாது..
எல்பிஜி கேஸ் சிலிண்டர்
அத்துடன் மட்டுமல்லாமல், இனி கேஸ் சிலிண்டர் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்றால் நுகர்வோர் அனைவரும் தங்களின் பயோமெட்ரிக் இ-கேஒய்சி முறையை முடிக்க வேண்டும்.. அதாவது உங்கள் கைரேகை அல்லது முகத்தை அடையாளப்படுத்தி நம்பரை இணைக்க வேண்டும்.. இதைச் செய்யத் தவறினால் உங்கள் கேஸ் சிலிண்டர் புக்கிங் நிறுத்தப்படலாம்.. இதுவரை 43,000-க்கும் மேற்பட்ட கஸ்டமர்கள் தாங்களாகவே முன்வந்து தங்களது எல்பிஜி இணைப்புகளைத் திரும்ப ஒப்படைத்துள்ளனர்..
ஏன் இந்த திடீர் மாற்றம் என்றால், சர்வதேச சூழல்தான் காரணமாக சொல்லப்படுகிறது.. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 88 சதவீதத்தையும், எல்பிஜி தேவையில் 60 சதவீதத்தையும், இயற்கை எரிவாயுவில் 50 சதவீதத்தையும் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்கிறது.
ஈரான் - இஸ்ரேல் போர்
இப்போது ஈரான் - இஸ்ரேல் இடையே நிலவும் போர் பதற்றமும், உலக நாடுகளின் எரிபொருள் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவும் நெருக்கடியும் விநியோகத்தைப் பாதிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளன.. இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு, சிலிண்டர் பதுக்கலைத் தடுக்கவும் தகுதியுள்ளவர்களுக்கு எரிவாயு சரியாக கிடைப்பதை உறுதி செய்யவும் அரசு இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது..
இதற்காகவே டிஜிட்டல் கண்காணிப்பு மற்றும் விநியோக அங்கீகாரக் குறியீடு (DAC) முறை உள்ளிட்ட தொழில்நுட்ப மாற்றங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன..
பாதுகாப்பு மற்றும் தடமறிதலுக்காக QR/RFID குறியீடுகள் வழியாக டிஜிட்டல் கண்காணிப்பு இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.. சுமார் 95 சதவீத எல்பிஜி சிலிண்டர் விநியோகங்கள், விநியோக அங்கீகாரக் குறியீடு (DAC) அமைப்பு மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.
2 கேஸ் சிலிண்டர் இருக்கா
தற்போது 2 சேவைகளையும் வைத்திருக்கும் தனிநபர்களைத் தரவுகள் மூலம் அரசு கண்காணித்து வருகிறது.. விதிகளை மீறுபவர்கள் மீது எல்பிஜி நிரப்புவதை நிறுத்துவது மட்டுமின்றி, கூடுதல் இணைப்புகளை ரத்து செய்தல் மற்றும் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது-
அதனால் உங்களிடம் பிஎன்ஜி இணைப்பு இருந்தால் எல்பிஜி சிலிண்டர் தொடர்பான விதிமுறைகளை சரிபார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.. இல்லாவிட்டால் இ-கேஒய்சி பணிகளை உடனே முடிக்க வேண்டும்.. ஜூன் 30-க்குள் இந்த புதிய விதிமுறைகள் நாடு முழுவதும் நடைமுறைக்கு வரவுள்ளன.. இதன் மூலம் எரிவாயு விநியோகத்தை ஒழுங்குபடுத்த அரசு முயற்சி செய்து வருகிறது..!!!












Click it and Unblock the Notifications