சென்னையில் மூடப்படாத போர்வெல்கள்.. மாநகராட்சி கமிஷனருக்கு ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: சுஜித் மரணம் போல சென்னையில் நடக்காமல் தடுக்க சென்னை பெரம்பூரில் தனியார் குடியிருப்பு பாதையில் உள்ள இரண்டு ஆழ்துளை கிணறுகளை முழுமையாக மூட நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பெரம்பூர் செம்பியம் பகுதியில் 8 வீடுகள் கொண்ட டைமண்ட் குடியிருப்பில் பொதுப்பாதையில் இரண்டு ஆழ்துளை கிணறுகள் போடப்பட்டன. தண்ணீர் வராததால் பிளைவுட் மற்றும் கான்கரீட் போட்டு மேலோட்டமாக மூடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மணப்பாறையில் மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் மரணமடைந்த சம்பவத்தை தொடர்ந்து, தனியார் குடியிருப்பில் முறையாக மூடப்படாமல் இருக்கும் இரண்டு ஆழ்துளை கிணறுகளை மூட நடவடிக்கை எடுக்கக் கோரி குடியிருப்பில் வசிக்கும் ஜி.ஜெயஸ்ரீ என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பயன்படுத்தும் பொதுவழியில் முறையாக மூடப்படாத ஆழ்துளை கிணறுகளை மூடக் கோரி தமிழக நகராட்சி நிர்வாகத்துறை, சென்னை மாநகராட்சி, செம்பியம் காவல் நிலையத்துக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், இதுதொடர்பாக நவம்பர் 15ம் தேதிக்குள் சென்னை மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நவம்பர் 15ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications