பள்ளி, கல்லூரிகளின் சாதிப் பெயர்களை நீக்குவதில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? ஹைகோர்ட் கேள்வி
சென்னை: பள்ளிக் கூடங்களில் சாதிய பாகுபாடு இருக்கக் கூடாது என அவற்றை நீக்க ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்திருக்கிறது தமிழக அரசு.ஆனால் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் பெயரில் உள்ள சாதிப் பெயரை நீக்கும் விவகாரத்தில் தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்க அவகாசம் கோருவது ஏன் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்துக்கு சிறப்பு அதிகாரியை நியமித்ததை எதிர்த்து சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி, சாதியை மேம்படுத்தும் நோக்கத்துடன் துவங்கப்பட்டுள்ள சங்கத்தை, சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியுமா என பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தார்.

சாதி சங்கங்கள் நடத்தும் கல்வி நிறுவனங்கள் சாதிப் பெயருடன் உள்ள நிலையில், அங்கு ஆசிரியர் "சாதிகள் இல்லையடி பாப்பா" என பாடம் நடத்துவது பெரிய முரண் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு கடந்தவாரம் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், இதேபோன்ற வழக்கில் மதுரை அமர்வு, சாதி சங்கங்கள் குறிப்பிட்ட சாதியினரின் நலனுக்கானது என்ற சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொள்ள அறிவுறுத்தும்படி, பதிவுத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின் அடிப்படையில், கடந்த 2024 ம் ஆண்டு நவம்பர் மாதம் சங்கங்களுக்கு சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
எந்த சங்கங்களும் விதிகளை திருத்தியதாக தெரியவில்லை எனத் தெரிவித்த சென்னை உயர்நீதிம்ன்ற நீதிபதி பரத சக்கரவர்த்தி, விதிகளை திருத்தாத சங்கங்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் மேலும், சில அரசு பள்ளிகளில் கூட சாதிப் பெயர் இடம் பெற்றுள்ளதாகவும் அதிருப்தி தெரிவித்தார். இதற்கு பதிலளித்த தலைமை வழக்கறிஞர், பள்ளிக்கு நன்கொடை அளித்தவர்களின் பெயர் பள்ளிக்கு சூட்டப்பட்டிருக்கும் எனவும் விளக்கமளித்தார்.
அப்படி இருந்தாலும், சாதிப் பெயர் சேர்க்கப்படக் கூடாது எனக் கூறிய நீதிபதி டி. பரத சக்கரவர்த்தி , பகுத்தறிவுவாதிகள், நாத்திகர்கள் சங்கங்களும் கூட சாதிப் பெயர்களை தாங்கியிருப்பதாக குறிப்பிட்டார். மேலும், பள்ளி, கல்லூரிகளின் பெயரில் உள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்படுமா என விளக்கமளிக்க அரசுத்தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஒத்திவைத்திருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி. பரத சக்கரவர்த்தி முன்பாக வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் கே.கார்த்திக் ஜெகநாத், இதுதொடர்பான அரசின் நிலைப்பாடு குறித்து தெரிவிக்க ஒரு வாரம் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
அதற்கு அதிருப்தி தெரிவித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி. பரத சக்கரவர்த்தி , "பள்ளிக் கூடங்களில் சாதிய பாகுபாடு இருக்கக் கூடாது என அவற்றை நீக்க ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்திருக்கிறது தமிழக அரசு.ஆனால் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் பெயரில் உள்ள சாதிப் பெயரை நீக்கும் விவகாரத்தில் தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்க அவகாசம் கோருவது ஏன்?" என்று கேள்வி எழுப்பினார். பின்னர் ஒரு வாரம் கால அவகாசம் வழங்கிய நீதிபதி, அதற்கு மேல் அவகாசம் கேட்கக் கூடாது என அறிவுறுத்தி விசாரணையை ஒத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications