என்னங்க இது தமிழ்நாடு அரசுக்கு வந்த சோதனை? நீட்டை தட்டி தூக்கிய 67 வயது முதியவர்..சீட் கேட்டு வழக்கு
சென்னை: மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதி கோரிய பி.யு.சி. படித்த 67 வயது முதியவர் முன்வைத்த கோரிக்கையை பரிசீலனை செய்யுமாறு மருத்துவ மாணவர் சேர்க்கை குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
நீட் தேர்வு நடந்து முடிந்து தற்போது தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இதில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு அரசுப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வில் இருந்து எப்படியாவது விலக்கு பெற்றுவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில்தான் தமிழ்நாடு அரசுக்கு புதிய சோதனையாக வந்து இருக்கிறார் 67 வயது முதியவர். தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் பங்கேற்க தன்னை அனுமதிக்கும்படி 67 வயது முதியவர் கோரியுள்ளார்.
இது தொடர்பாக தேர்வுக்குழுவுக்கு உத்தரவிடக் கோரி பி.யு.சி. முடித்த சென்னை பெருங்குடியைச் சேர்ந்த முனுசாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, பி.யு.சி. படிப்பில் ஆங்கிலம், இயற்பியல், வேதியியல் மற்றும் தாவரவியல், விலங்கியல் பாடங்கள் உள்ளடக்கிய நேச்சுரல் சயின்ஸ் படித்துள்ளதாகவும், நீட் தேர்வில் 720க்கு 408 மதிப்பெண்கள் பெற்றுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் பரிசீலிக்கவில்லை என்றால் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வில் கலந்து கொள்வது குறித்து பரிசீலிக்க கோரி தேர்வுக்குழுவுக்கு மனு அனுப்பியதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. தேர்வுக்குழு தரப்பில் , மனுதாரர் ப்ளஸ் 2 படிக்காத காரணத்தால் அவரை கலந்தாய்வில் அனுமதிக்கவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள், நீட் தேர்வுக்கான கல்வித்தகுதி என்ன? வயது வரம்பு என்ன? எனக் கேள்விகளை எழுப்பினர். அதற்கு தேசிய மருத்துவ ஆணையம் தரப்பில், ப்ளஸ் 2 வில் இயற்பியல், வேதியல் மற்றும் உயிரியல் படித்திருக்க வேண்டும் எனவும், மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது உச்ச வரம்பு ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், நீட் தேர்வுக்கான தகுதி விதிகளே, மருத்துவ படிப்புக்கும் பொருந்தும் எனவும் விளக்கமளிக்கப்பட்டது. இதையடுத்து, முதல் சுற்று கலந்தாய்வு முடிந்து விட்ட நிலையில், இரண்டாவது சுற்று கலந்தாய்வுக்கு முன், மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலிக்க வேண்டும் என தேர்வுக் குழுவுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.












Click it and Unblock the Notifications