பாராசிட்டமால் மாத்திரையை சாப்பிடாதீங்க.. பொது சுகாதாரத் துறை கொடுத்த வார்னிங்! காரணம் இதுதான்
சென்னை: தமிழ்நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக கோடை நோய்களும் அதிகரித்துள்ளன. இந்நிலையில், இந்த நோய்களுக்கு பாராசிட்டமால் எடுத்துக்கொள்ள கூடாது என்று பொது சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.
மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மாத்திரைகளை எடுத்துக்கொள்வது தவறு. அதிலும், குறிப்பிட்ட சில வகை மாத்திரைகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும் என்று சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.

கோடையும் நோய்களும்
கோடைக்காலங்களில் நீர் மூலம் நோய்கள் அதிகம் பரவ வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக, அசுத்தமான நீர் மூலம் கல்லீரல் பாதிக்கப்பட்டு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. தவிர, சுகாதாரமற்ற நீர் மற்றும் உணவினால் வயிற்றுப்போக்கு மற்றும் காலரா ஏற்படுகிறது. 'சால்மோனெல்லா' பாக்டீரியாவால் பரவும் டைபாய்டு காய்ச்சல் கோடையில் அதிகம் தென்படும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை மட்டும் கொடுக்க வேண்டும்.
மாத்திரைகள் வேண்டாம்
ஆனால், மருத்துவர்களின் பரிந்துரையின்றி பாராசிட்டமால் உள்ளிட்ட மருந்துகளை பலரும் எடுத்துக்கொள்கின்றனர். இப்படி செய்யக்கூடது என்று பொது சுகாதாரத்துறை வார்னிங் கொடுத்திருக்கிறது.
குறிப்பாக, கோடை வெயிலால் உடல் வெப்பநிலை அதிகரித்து, யாராவது மயக்கம் அல்லது சோர்வடைந்தால், அதைச் சாதாரணக் காய்ச்சல் என்று நினைத்து பாராசிட்டமால் அல்லது ஆஸ்பிரின் போன்ற மாத்திரைகளை வழங்கக் கூடாது.
ஏன் ஆபத்தானது?
வெப்பவாதத்தால் (Heat Stroke) பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த மாத்திரைகளைக் கொடுக்கும்போது, அவை கடுமையான எதிர்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். சில நேரங்களில் இது உயிருக்கே ஆபத்தாகவும் முடியலாம் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
அதாவது, வெப்பவாதம் என்பது சாதாரண காய்ச்சல் கிடையாது. சாதாரண காய்ச்சலில் மூளையில் உள்ள வெப்பக் கட்டுப்பாட்டு மையம் வெப்பநிலையை உயர்த்துகிறது. ஆனால் வெப்பவாதம் என்பது, சுற்றியுள்ள கடும் வெப்பத்தால் உடலின் குளிரூட்டும் கட்டமைப்பு முற்றிலும் செயலிழந்து போவதாகும்.
பாராசிட்டமால் என்ன செய்யும்?
பாராசிட்டமால் போன்ற மருந்துகள், மூளையில் உள்ள காய்ச்சல் கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் வெப்பத்தைக் குறைப்பவை. ஆனால் வெப்பவாதத்தின் போது உடல் வெப்பநிலை வெளிப்புற வெப்பத்தால் உயர்கிறது, மூளையின் தூண்டுதலால் அல்ல. எனவே, இந்த மருந்துகள் உடல் வெப்பத்தைக் குறைக்க உதவாது.
ரத்த கசிவு
வெப்பவாதத்தின் போது ரத்த ஓட்டம் குறைய வாய்ப்புள்ளது, இது கல்லீரலுக்குச் செல்லும் ரத்தத்தின் அளவையும் பாதிக்கும். இந்நிலையில் பாராசிட்டமால் உட்கொள்வது ஏற்கனவே அழுத்தத்தில் இருக்கும் கல்லீரலை மேலும் பாதித்து, கல்லீரல் செயலிழப்புக்கு வழிவகுக்கும். வெப்பவாதத்தின் போது ரத்தத்தில் உள்ள தட்டுகள் மற்றும் ரத்தம் உறைவதற்கான காரணிகள் பாதிக்கப்படலாம். ஆஸ்பிரின் போன்ற மருந்துகள் ரத்தத்தை மேலும் நீர்க்கச் செய்யும் என்பதால், இது உட்புற ரத்தக்கசிவை ஏற்படுத்தி உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.
என்ன செய்ய வேண்டும்?
மேலும், உடலில் நீர்ச்சத்து மிகக் குறைவாக இருக்கும்போது இத்தகைய மருந்துகளை எடுத்துக்கொள்வது சிறுநீரகத்தின் வடிகட்டும் திறனைப் பாதித்து சிறுநீரகச் செயலிழப்பை உண்டாக்கும்.
வெப்பவாதம் என்பது ஒரு இயந்திரக் கோளாறு போன்றது. சூடான என்ஜினை அணைத்துவிட்டு அதன் மீது தண்ணீர் ஊற்றிக் குளிர்விப்பது போல, பாதிக்கப்பட்ட நபரின் உடலை வெளிப்புறமாக மட்டுமே குளிர்விக்க வேண்டும்.
ஐஸ் கட்டிகள் அல்லது குளிர்ந்த நீரால் உடலைத் துடைப்பது.
மின்விசிறி அல்லது ஏசி காற்றில் வைப்பது.
அக்குள் மற்றும் கழுத்துப் பகுதிகளில் குளிர்ந்த துணியை வைப்பது.
சுருக்கமாகச் சொன்னால், வெப்பவாதம் என்பது உடலுக்குள்ளிருந்து வரும் காய்ச்சல் அல்ல, வெளியிலிருந்து ஏறிய வெப்பம். இதற்கு மருந்து மாத்திரைகளை விட, வெளிப்புறக் குளிர்விப்பு முறையே சிறந்தது மற்றும் பாதுகாப்பானது என பொது சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications