இந்தியாவில் அடுத்த 5 நாட்களுக்கு.. வெப்ப நிலை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கொடுத்த வார்னிங்
சென்னை: நாட்டில் பெரும்பாலான இடங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப நிலை படிப்படியாக அதிகரிக்கும். அதிகபட்சமாக 2-4 டிகிரி செல்சியஸ் வெப்பம் உயரக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்தியாவில் நடப்பு ஆண்டு வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. பிப்ரவரி மாத இறுதியில் அதிகரிக்கத் தொடங்கிய வெப்பநிலை படிப்படியாக அதன் உக்கிரத்தை காட்ட தொடங்கியுள்ளது. இன்னும் அக்னி நட்சத்திரம் தொடங்கவில்லை. ஆனால் இப்போதே வெப்பத்தின் தாக்கம் மிகக் கடுமையாக இருப்பதால் அக்னி நட்சத்திரம் தொடங்கினால் நிலைமை எப்படி இருக்குமோ என மக்கள் யோசிக்கும் அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

தமிழ்நாட்டில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பே வெப்பம் 3 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. ஈரோடு, சேலம், நாமக்கல்லில் 100 டிகிரி பாரன்ஹீட்டிற்கு அதிகமாக வெப்பம் பதிவானது. வரும் நாட்களில் தமிழ்நாட்டில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இந்தியாவில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப நிலை இன்னும் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கையில், "நாட்டில் பெரும்பாலான இடங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப நிலை படிப்படியாக அதிகரிக்கும். அதிகபட்சமாக 2-4 டிகிரி செல்சியஸ் வெப்பம் உயரக்கூடும்" என்று தெரிவித்துள்ளது. அதேபோல், அடுத்த இரு தினங்களுக்கு மத்திய பிரதேசம் , ஒடிசா, மகராஷ்டிரா, சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களில் பலத்த காற்று மற்றும் இடி மின்னல் இருக்கும் என்றும் அதன்பிறகு குறைய தொடங்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

முன்னதாக இந்த மாத துவக்கத்தில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட வானிலை முன்னறிவிப்பில், வடமேற்கு உள்ளிட்ட சில பகுதிகளை தவிர்த்து இந்தியாவில் ஏப்ரல் முதல் ஜூன் வரை வெப்ப நிலை இயல்பை விட அதிகமாக இருக்கும். குறிப்பாக பீகார், ஜார்க்கண்ட், உத்தரபிரதேசம், ஒடிசா, மேற்கு வங்காளம், சத்தீஷ்கர், மகராஷ்டிரா, குஜராத், பஞ்சாப் மற்றும் அரியானா ஆகிய மாநிலங்களில் அதிக நாட்கள் வெப்ப நிலை நீடிக்கும்" என்று தெரிவித்து இருந்தது.
பருவ நிலை மாற்றம் காரணமாக உலக வெப்பமும் அடிக்கடி கடுமையான இயற்கை சீற்றங்களும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக இந்தியாவில் வானிலை பற்றிய தகவல்கள் பதிவு செய்ய துவங்கிய பிறகு அதாவது 1901 ஆம் ஆண்டுக்கு பிறகு கடந்த பிப்ரவரி மாதம் தான் அதிகபட்ச வெப்பம் பதிவாகியிருந்தது.












Click it and Unblock the Notifications