டாஸ்மாக் திறப்பு மாறி மாறி விமர்சித்த திமுக அதிமுக..சூப்பராக பதிலளித்த விவாதத்தை முடித்த துரைமுருகன்
சென்னை: டாஸ்மாக் திறப்பு குறித்துத் தொடங்கிய விவாதம் திசைமாறி, திமுக அதிமுக மாறி மாறி குறை செல்லிக் கொண்டிருந்த நிலையில், சமயோஜிதமாக பதிலளித்த இந்த விவாதத்தை மூத்த அமைச்சர் துரைமுருகன் முடிவுக்குக் கொண்டு வந்தார்.
Recommended Video
தமிழ்நாட்டின் 16ஆவது சட்டசபை முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று தொடங்கியது. இந்த உரையில் பல அம்சங்கள் இடம் பெற்றிருந்தது.
ஆளுநர் உரையை வழக்கம்போல ஆளும் கட்சியினரும் கூட்டணி கட்சியினரும் வரவேற்றனர். அதேபோல எதிர்க்கட்சிகள் ஆளுநர் உரைக்கு எதிராகவே கருத்து தெரிவித்தனர்.

டாஸ்மாக் திறப்பு
இந்நிலையில், சட்டசபையின் இரண்டாம் நாளான இன்று ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது அதிமுக அரக்கோணம் தொகுதி எம்எல்ஏ ரவி, டாஸ்மாக் திறக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினார். அதிமுக ஆட்சியில் கொரோனா குறைவாக இருந்தபோது டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதற்கு தற்போதைய முதல்வர் போராட்டம் நடத்தியதாகவும் ஆனால் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையிலும் டாஸ்மாக் கடைகளைத் திறந்தது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.

காரணம் என்ன
இதற்குப் பதிலளித்த மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாநிலங்களில் மட்டுமே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், கள்ளச் சந்தைகளில் கள்ளச்சாரம் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கவே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதாகவும் அமைச்சர் செந்தில்பாலாஜி குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சி தலைவர்
உடனடியாக குறுக்கிட்ட எதிர் கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, "அதிமுக ஆட்சியில் கொரோனா பரவல் குறைவாக இருந்த காலத்தில் தான் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன என்பதையே அதிமுக உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் கொரோனா பாதிப்பு 7,000ஆக இருந்தது. ஆனால், இப்போது அந்த பாதிப்பு அதிகரித்துள்ளது" என்றார். அப்போது குறுக்கிட்ட மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், மே மாதம் 26 ஆயிரமாக இருந்த கொரோனா பாதிப்பு அரசின் நடவடிக்கைகளால் ஏழாயிரமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

தேர்தல் நடத்தை விதிகள்
தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு வரை கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்ததாகக் குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி தேர்தல் நடத்தை விதிகள் அமலானதாலேயே முழுமையாகச் செயல்படமுடியவில்லை என்றார். அதிகாரிகளை நேரில்கூட சந்திக்க முடியாத நிலையிலும் தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் மாவட்ட ஆட்சியர்கள் கூட்டம் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் எ வ வேலு, "தேர்தல் அறிவிப்பால் செயல்பட முடியவில்லை என்றால், அப்போதைய அமைச்சர் விஜயபாஸ்கர் தடுப்பு பணிகளில் ஈட்டுப்பட்டரே" எனச் சுட்டிக்காட்டினார்.

அமைச்சர் துரைமுருகன்
டாஸ்மாக் திறப்பு குறித்துத் தொடங்கிய விவாதம் அப்படியே மாறியது; ஒருவருக்கு ஒருவர் குறை சொல்லிக் கொண்டிருந்தனர். இதனால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக எழுந்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், "உங்கள் ஆட்சியில் நீங்கள் கட்டுப்படுத்தினீர்கள். எங்கள் ஆட்சியில் நாங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தோம்" என்று கூறி விவாதத்தை முடித்து வைத்தார்.

டாஸ்மாக் கடைகள்
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் உச்சத்திலிருந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது சுமார் 35 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. கொரோனா குறையத் தொடங்கியதைத் தொடர்ந்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி கொரோனா குறைவாக இருந்த 27 மாவட்டங்களில் மட்டும் டாஸ்மாக் கடைகள் கடந்த ஜூன் 14ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகளைத் திறக்க அரசு அனுமதி அளித்திருந்தது,












Click it and Unblock the Notifications