ரவுண்டு கட்டிய மழை.. சீர்காழியில் இறங்கிய “பூதம்”! டமால்டுமீல் இடியால் தூக்கம் தொலைத்த சென்னை மக்கள்
சென்னை: தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் விடிய விடிய இடி மின்னலுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது.
வங்கக்கடலில் உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுவடையாமல், வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாடு - புதுச்சேரி கடற்கரை பகுதியில் இன்று அதிகாலை கரையை கடக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது.

கனமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரம் அடையத் தொடங்கியுள்ளதை அடுத்து, வங்கக் கடலில் புதன்கிழமை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. அது வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வியாழன் அன்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டது.

20 மாவட்டங்களில்
இதன் காரணமாக தென் தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும், வடதமிழகத்தில் சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. நேற்று தமிழகம் முழுவதும் சுமார் 20க்கும் அதிகமான மாவட்டங்களில் லேசான மழை தொடங்கி தற்போது கனமழை பெய்து வருகிறது.

சென்னை
தலைநகர் சென்னையில் தொடர்ந்து இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. விடிய விடிய ஒலித்த இடி சத்தத்தால் பொதுமக்கள் தூக்கம் தொலைத்ததாக சமூக வலைதளங்களில் பலர் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள். கனமழை காரணமாக பல இடங்களில் மழை நீர் தேங்கி இருக்கின்றன.

வட மாவட்டங்கள்
அவற்றை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையை ஒட்டிய திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. குறிப்பாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் பகுதியாக அறிவிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் மழை கொட்டித்தீர்த்து உள்ளது.

மயிலாடுதுறை
நாகப்பட்டினம் தொடங்கி அதிராம்பட்டினம் வரை மழை நீடிக்கும் என எச்சரிக்கபட்ட நிலையில் விடிய விடிய தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் மழை கொட்டித்தீர்த்து உள்ளது. குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 40 செ.மீ க்கு மேல் மழை பதிவானதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

அதிகபட்ச மழை
அதேபோல் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் 31.5 சென்டி மீட்டர் கொட்டித் தீர்த்து இருக்கிறது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 30.7 சென்டி மீட்டர் மழை வெளுத்து வாங்கி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயிலில் 24.2 சென்டி மீட்டர் மழை பொழிந்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் பொறையாரில் - 18.3 சென்டி மீட்டர் மழையும் மயிலாடுதுறையில் 16 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி இருக்கிறது.

தென் மாவட்டங்கள்
இதேபோல் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களிலும் விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களிலும் நேற்று முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.












Click it and Unblock the Notifications