14 மாவட்டங்களில் நாளை கன மழை கொட்டித் தீர்க்கும் - சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு!
சென்னை: தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, நீலகிரி, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மழை கொட்டி தீர்த்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஊத்தங்கரை, ஜம்புகுட்டப்பட்டி பகுதிகளில் தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. நெடுங்கல், பெருஞ்சாணி அணை, பையூர் ஆகிய பகுதிகளில் தலா 6 செ.மீ. மழையும், புத்தன் அணை, பூதபாண்டி, பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, பந்தலூர் ஆகிய பகுதிகளில் தலா 5 செ.மீ. மழையும் பதிவாதியுள்ளது.

14 மாவட்டங்களில் இன்று கனமழை
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, மதுரை, கரூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

19 மாவட்டங்களில் நாளை கனமழை
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, தென்காசி, மதுரை, கரூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது

6-ம் தேதி 22 மாவட்டங்களில் மழை
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வரும் 6-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

5 மாவட்டங்களில் நீடிக்கும் மழை
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் வரும் 8-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் மிதமான மழை
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை
லட்சத்தீவு - மாலத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேத்தில் இன்றும், நாளையும் சூறாவளிக்காற்று வீசக்கூடும். குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்தக்காற்று வீசக்கூடும்.
வடக்கு அந்தமான் கடல் பகுதிகள், மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே, வரும் 8-ம் தேதி வரை மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications