சென்னையில் இரவு முழுக்க கொட்டிய மழை.. சாலைகளில் தேங்கிய மழை நீர்.. ரயில், விமான சேவை பாதிப்பு
சென்னை: சென்னையில் இரவு முழுக்க கொட்டிய மழை காரணமாக சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளது. லேசாக ஆரம்பித்த மழை பின்னிரவு வரை தீவிரமாக பெய்தது.
Recommended Video
தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட பல்வேறு வட மாவட்டங்களில் நேற்று இரவு திடீரென மழை பெய்தது. சென்னையில் இரவு 9 மணிக்கு மேல் தொடங்கிய மழை நேரம் செல்ல செல்ல தீவிரம் அடைந்தது. அதிகாலை வரை சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

எங்கு பெய்தது?
அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , திருவொற்றியூர் , எண்ணூர் பகுதிகளில் மழை பெய்தது. தேனாம்பேட்டை, அண்ணா சாலை, மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, பகுதிகளில் இரவு முழுக்க கனமழை பெய்தது. நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி ஆகிய பகுதிகளில் இரவு முழுக்க விட்டு விட்டு மழை பெய்தது. மழை பெய்த பகுதிகளில் பல இடங்களில் லேசாக தண்ணீர் தேங்கி உள்ளது.

தண்ணீர் தேங்கி உள்ளது
எழும்பூர், ஆவடி, வேளச்சேரி, தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. சில இடங்களில் தண்ணீர் வடியாததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்தடை காரணமாக இரயில் சேவை பாதிப்பு அடைந்துள்ளது. சென்னை பீச் ஸ்டேஷன் செல்லும் ரயில் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால் பேருந்து பயணமும் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் டிரான்ஸ்பார்மர் வெடித்ததால் மின் தடை ஏற்பட்டுள்ளது.

விமான சேவை
நேற்றிரவு பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் 31 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது. ஜெர்மனி, தோகா, துபாய், மும்பையில் இருந்து வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் திருப்பி விடப்பட்டன இந்த விமானங்கள் சென்னைக்கு வருவதற்கு பதிலாக ஐதராபாத், பெங்களூரு திரும்பின. மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழை பெய்து வருகிறது.

எவ்வளவு பெய்தது?
மேற்கு தாம்பரம் 13 செ.மீ., தரமணி, 11 செ.மீ., சென்னை விமான நிலைய பகுதியில் 9 செ.மீ மழை பதிவாகி உள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போது சென்னையில் சில இடங்களில் லேசாக மழை பெய்து வருகிறது. சென்னையில் எவ்வளவு மழை பெய்தது என்ற விவரத்தை இன்னும் விரிவாக வானிலை மையம் வெளியிடவில்லை. இன்றும் சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.












Click it and Unblock the Notifications