தமிழகத்தில் கொட்டித்தீர்த்த மழை... நீலகிரி, தேனியில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை: தமிழகத்தின் பல மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நீலகிரி, தேனி, மாவட்டங்களில் இடி,மின்னலுடன் மிக மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை ஆரம்பத்தில் இருந்தே அமர்களமாக பெய்து வருகிறது. சென்னையிலும் புறநகர் பகுதிகளிலும் மழை பரவலாக பெய்து வருகிறது.

குமரிக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு மழை பெய்யக் கூடும் என்றும், ஓரிரு இடங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
வானிலை மையம் அறிவித்தது போல சென்னையில் புரசைவாக்கம், எழும்பூர், வேப்பேரி, கோடம்பாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி, உள்ளிட்ட பகுதிகளில் முதலில் தூறலும், அதன்பின்னர் கனமழையும் பெய்தது. புறநகர் பகுதிகளான பல்லாவரம், அனகாபுத்தூர், தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், சோழிங்கநல்லூர், பெருங்குடி, துரைப்பாக்கம், கிண்டி, மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும், இதேபோல் ராமாபுரம், வளசரவாக்கம், போரூர், வேளச்சேரி போன்ற பகுதிகளிலும் மழை பெய்தது.
இன்று அதிகாலை முதலே திண்டுக்கல், மதுரை மாவட்டங்களின் பல பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. காலை நேரங்களில் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. நகரின் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தேனி, நீலகிரியில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 24 மணிநேரத்தில் தேனி, திருப்பூர்.திண்டுக்கல், கோவையிலும் மலைப்பகுதிகளிலும் மிக மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அடுத்த 48 மணிநேரத்தில் தூத்துக்குடி, ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
சென்னையிலும் புறநகரிலும் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications