அந்த அரபிக்கடலோரம்.. புதிதாக உருவாகும் காற்றழுத்தம்.. கேரளாவில் விளாசப்போகும் கனமழை
சென்னை: தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவுகள் பகுதியில் நாளைய தினம் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் இது வலுப்பெற்று மேற்கு - வடமேற்கு திசையில் நகரக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சிலநாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. வட தமிழகம் தென் தமிழகம் என அனைத்து பகுதிகளிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்து வருகிறது.

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சியே தமிழகத்தில் இந்த மழை பொழிவுக்கு காரணம் என கூறப்படுகிறது. தென்மேற்கு பருவமழை நிறைவடைந்துள்ள நிலையில் வளிமண்டல சுழற்சி காரணமாக பெய்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் விடியவிடிய மழை பெய்தது. அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யும் என்றும் இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவுகள் பகுதியில் நாளை 17ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் இது வலுப்பெற்று மேற்கு - வடமேற்கு திசையில் நகரக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே கேரளாவில் கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் சில இடங்களில் வெள்ளப் பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, இடுக்கி ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்ட 4 மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 20 செ.மீ வரை மழை பதிவாகியுள்ளது.

திருவனந்தபுரம் மாவட்டம் அதிக அளவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அம்மாவட்டத்தின் கழகூடம் உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளதால், அப்பகுதி மக்கள் அங்கிருந்து மிதவை படகு மூலம் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். திருவனந்தபுரத்தில் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று கனமழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளா - லட்சத்தீவு கடற்பகுதிகளில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தம் நாளைய தினம் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அடுத்த சில நாட்களில் அது மேலும் வலுப்பெற்று மேற்கு நோக்கி நகரும். கேரள கடற்கரையை விட்டு நகர்ந்தால், மழையின் தீவிரம் குறையும். இல்லையெனில் கனமழை தொடர வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 18ஆம் தேதி வரை லட்சத்தீவு பகுதிகளில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications